நாலு பக்கமும் தொம்பை கட்டணும். நிறைய அலங்கார வேலை இருக்கு. ஜாயிண்ட் வேலையெல்லாம் முடிச்சு, பளபளன்னு புதுத் தேராக்கிடணும்" என்றார் கணபதி ஸ்தபதி.
"தேர் வேலையை கவனிக்கப் போறது யார் யார்?"
"நானும் நன்னனும்தான். தச்சு வேலை செய்யறவங்க ஓட்டல்ல இருக்காங்க. அவங்களும் இப்ப வராங்க...”
"பந்தக்கால் முகூர்த்தம் வரைக்கும் எங்களுக்கு ஒரு வேலையும் இல்லை. அதனால், நாங்க நாலு பேரும் அதுக்குள்ளே கியோட்டோவுக்குப் போயிட்டு வந்துடறோம்" என்றார் மனோரமா,
”அதுவும் நல்ல யோசனைதான்" என்றார் நன்னன்.
"கியோட்டோ ஜப்பானின் பழைய தலைநகரம். 1868லேருந்து டோக்கியோ தான் புதுத் தலைநகரம் என்றார் புள்ளி.
”கியோட்டோ, டோக்கியோ " என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்தார் மனோரமா.
'KYOTO பழைய நகரம். TOKYO புதுசு. ரெண்டுமே அஞ்சு எழுத்துதான் தலைநகரம் மாறின மாதிரி எழுத்துக்களும் இடம் மாறியிருக்கு!" என்று புள்ளி சுப்புடு புதிர் போட்டார்.
”எப்படி?”
”KYOTO-வில் உள்ள கடைசி ரெண்டு எழுத்தை முதல்ல மாத்திப் போட்டா TOKYO!" என்றார் புள்ளி.
"ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க!" - மனோரமா சிரித்தார்.
"நீங்க ஆச்சி , நான் ஆராய்ச்சி !" என்றார் புள்ளி.