நாலு பேரும் ஸ்டேஷன் வாசலில் போய் நின்றபோது அந்த நகரத்தின் கம்பீரமும், கலகலப்பும் எதிரில் டவர் ஒட்டலும் தெரிந்தன. விசாலமான விஸ்தீரணத்தைக் கடந்து, அந்தக் கட்டடத்தின் ஓரமாகவே நடந்து போனார்கள்.
பக்கத்தில் ஒரு சின்ன சந்து திரும்பியது. ”இந்தத் தெருவில் நிறைய 'இன்ன்'ஸ் இருக்கு. நாலு பேர் தங்கறதுக்கு வசதியாவும் சீப்பாவும் இருக்கும். கட்டில் மட்டும் இருக்காது. தரையில் பாய் விரித்து திண்டு போட்டிருப்பார்கள்" என்றார் கோமோச்சி.
”ஒரு ரைஸ் குக்கர் வாங்கி இன்ன்லயே சமையலும் பண்ணிட்டா சாப்பாட்டுச் செலவும் மிச்சமாப் போயிடும்" என்றார் புள்ளி.
"பஸ்ட் கிளாஸ் ஐடியா ! சாம்பார் பொடி, ரசப்பொடி, ஊறுகாய் பெருங்காயம் உள்பட சமையலுக்கு வேண்டிய எல்லாம் கொண்டாந்திருக்கேன். நானே சமையல் பண்ணிரட்டுமா?" என்று கேட்டார் மனோரமா.
"இன்ன்ல சமைக்கலாமா? ஒத்துக்குவாங்களா?" என்று பயந்தார் முத்து.
"இன்ன்ல சொந்தக்காரிக்குத் தெரிஞ்சா ஆபத்து. சத்தம் போட்டு விரட்டி விட்டுருவாங்க!" என்று எச்சரித்தாள். கோமோச்சி.
"ம். பார்த்துக்கலாம். சமாளிச்சுக்கலாம்" என்றார் புள்ளி.
”ஜப்பான்ல நம் ஊர் சாப்பாடா அதுவும் மனோரமா கையால பலே, பலே! அப்படின்னா சாம்பார் ஏதாச்சும் கூட..."
”சின்ன வெங்காயம் இருக்கு. சாம்பாரும் செஞ்சுட்டாப் போகுது" என்றார் மனோரமா.
ஒரு இன்ன் பிடித்து மேல் மாடியில் இரண்டு ரூம் எடுத்துக் கொண்டார்கள். அந்த இன்ன்னுக்குச் சொந்தக்கார அம்மாளுக்குத் தெரியாமல் ரகசியமாகச் சமைத்து விடுவது என்றும் முடிவு செய்தார்கள் ,