"என்ன எழுதறீங்க?" என்று கேட்டார் திருக்குறள் ஷோஜோ.
”அரண்மனையைச் சுற்றி நாலு பக்கமும் தேர் ஓட்டப் போறோம் இல்லையா? அந்த நாலு வீதிக்கும் நாலு பேர் வைக்கலாம்னு ஒரு யோசனை!"
"என்ன பேர் வைப்பீங்க?"
"அதைத்தான் எழுதிக்கிட்டிருக்கேன். வள்ளுவர் வீதி, இளங்கோ வீதி, ஒளவையார் வீதி, பாரி வீதி."
”பாரி விதி எதுக்கு?"
”முல்லைக்கு தேர் ஈந்த வள்ளல் பாரிதானே? அவன் பேரும் இருக்கட்டுமே!" என்றார் நன்னன்.
வெளிநாட்டிலிருந்து ஏராளமான டூரிஸ்ட்டுகள் தேரைச் சுற்றிச் சூழ்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருக்குறள் ஷோஜோ அவர்களுக்கெல்லாம் தேர் பற்றியும் தேரோட்டம் பற்றியும் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். தேரின் அடிப்பாகத்தில் இருந்த நுட்பமான சிற்பங்களைக் காட்டி, "இதெல்லாம் இந்தியாவின் கலைச்செல்வங்களையும் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் சிற்பங்கள். இந்தத் தேரின் மீது வள்ளுவர் சிலையை வைத்து ஊர்வலம் விடப் போகிறோம்" என்றார்.
"அப்படியா! ஊர்வலம் என்றைக்கு?" என்று ஆவலோடு கேட்டார் கிறிமாவோடு அங்கே வந்திருந்த ஜார்ஜ்.
”தேதி இன்னும் முடிவாகலே...." என்றார் ஷோ ஜோ.
தேரைச் சுற்றிச் சுற்றி ஒரு ஆராய்ச்சியோடு கவனித்தார் ஜார்ஜ். எல்லா பாகங்களையும் நுட்பமாகப் பார்த்துக் கொண்டார். நாலு சக்கரங்களையும் தொட்டுப் பார்த்து "ப்யூட்டிஃபுல் கார்விங்ஸ்!" என்று வியந்தார்.