"இந்துநாத்! தென்வட்டம் யூத் காங்கிரஸ் லீடர். நேத்துதான் நீங்க வரதா பெரியப்பா சொன்னார். வாங்கோ வண்டி வெளியே இருக்கு..."
இப்படி அரசியல் கலப்பட வரவேற்பை அவள் சற்றும் எதிர் நோக்கி இருக்கவில்லை.
அவளுக்குத் தெரிந்து பெரியப்பா கதர் உடுத்தியவரல்ல. அந்தக் காலத்தில் குடும்பத்துக்கு ஒட்டாமல் போய்விட்டான் என்று தந்தையைப் பற்றி கண்டவர்களிடமெல்லாம் குற்றம் சொல்வாராம். சென்ற தடவை அவள் பெரிய தந்தையின் வீட்டில் சில நாட்கள் தங்கிய போது கூடக் காங்கிரஸின் கொள்கைகளை வாயில் வறுத்து அரைத்துக் கொண்டிருந்தார். இந்த இளம் காங்கிரஸ் தலைவன் பெரியப்பாவுக்கு வேண்டியவன் தானா?
"பெட்டியை இப்படிக் கொடுங்க?" என்று அவன் கேட்க, அவள் பரவாயில்லை என்று தடுக்க இறுதியில் சற்றுப் பலமாகவே பிடுங்கினாற் போல் பெற்று, கூட வந்த ஒரு போர்ட்டர் தலையில் வைக்கிறான்.
"எனக்கு எத்தனையோ நாளாக உங்களைப் பார்க்க வேண்டுமென்றே ஆவல்! பெரியப்பா சொன்னார். நானே அழைச்சிண்டு வந்துடரேன்னு கிளம்பிட்டேன். சர்வசேவா சங்கத்துக்காரா ஏதோ மீட்டிங்குக்கெல்லாம் ஏற்பாடு பண்றதாகச் சொன்னார். நீங்க பேசாம எங்கிட்ட விட்டுடுங்கோ. நான் திக்கெட்டும் பேர் சொல்றாப்போல விளம்பரம் பண்ணிட மாட்டேன்? லீடர்ஷிப் உங்களைத் தேடி வந்திண்டிருக்கு. உண்மையைச் சொல்லப் போனா, மிஸ் யமுனா, தென்னாடே காத்துக் கிடக்கு. அப்பா, அம்மா, குடும்பமே தேசத் தொண்டர்கள். நாட்டுக்காக விரலசைக்காத கபோதிகள்ளாம் கதரின் பேருக்கே ஒரு கெட்ட பேர் ஏத்த மாட்டிண்டு இன்னிக்கு இம்பாலா காரில் போறப்ப, இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமான்னு ஆச்சரியப்பட்டேன்..."
நல்ல வேளை, இந்துநாத் அவள் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. கார்க் கதவைத் திறந்து, "உட்காருங்கள்" என்று உபசரிக்கிறான். புதிய அம்பாஸடர் கார். ஓட்டியும் புதியவனாக இருக்கிறான். அவன் முன்புறம் அமர்ந்து கொள்கிறான். வண்டி சென்டிரலைக் கடக்கிறது. தென்படும் சுவர்களிலெல்லாம் போஸ்டர்கள், சினிமா, அரசியல், இலக்கியம், தனி மனிதப் பிரவாகம் எல்லாமே சுவர்களில்! ஓ! நகரம் நகரம் தான்!