உலர்ந்த சேலையை உடுத்திக் கொண்டு தலையில் துண்டுடன் அவள் வெளியே வருகையில் மாடியில் யாருமே இல்லை போலிருக்கிறது.
"நீரு?..." என்று திரையைத் தள்ளிக் கொண்டு ஓரடி வைத்தவள் திடுக்கிட்டாற் போல் பின்வாங்குகிறாள்.
ஆயிரம் கோணல்களாக உடல் குறுகுறு போல் தோன்றுகிறது.
பம்பாய் டையிங் விளம்பரத்தில் காணும் ஆண் மகனைப் போல் ஓர் ஆடவன். நீரு அவன் மார்போடு ஒட்டிக் கிடக்கிறாள்.
யார்... இவன் தாம்... இவர் தாம்... அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட...
பட்டுத் துணியைக் கொண்டு மூடினாற் போல் செவிகள் சூடேற, வாளியில் சேலையைப் போட்டு வந்து ரெயிலழுக்குப் போகத் துவைத்துத் தோட்டத்தில் உலர்த்துகிறாள்.
பெரியப்பா எத்தனை நேரமாகப் பூஜை செய்கிறார்.
மோடாவில் நாள்தாள் கிடக்கிறது. ஊஞ்சற்பலகையில் யாருமில்லை.
பூஜை அறைப் பக்கமிருந்து தான் மனசைக் கவ்வும் பத்தி வாசனை வருகிறது. சின்னம்மா நிவேதனம் கொண்டு போகிறாள்.
யமுனா இருப்புக் கொள்ளாமல் நாள்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.
பாங்கி தேசியமயச் சட்டம் லோக்சபாவுக்கு வந்திருக்கிறது. சந்திரப் பிரயாண விவரங்கள்; பாராட்டுதல்கள்... கட்சிப் பிளவின் காரசாரத் தாக்குதல்கள்.
மனம் பதியவில்லை.