"அரசியல் வேண்டாம்! அப்ப சர்வோதயம் அது இதெல்லாம் எப்படிச் செயல்படும்? பேப்பரில் ஒரு நாலு வரிச் செய்தி போட வேண்டுமானால் அதற்கு ஒரு மந்திரி பேர் இருந்தால் தான் வரது. அரசியல் பதவிங்கற துருப்புச் சீட்டு இல்லாம ஒண்ணும் நடக்காது. அதனால் அரசியல் பதவியைச் சம்பாதிக்க முதலில் முயற்சி செய்யணும். அதில்லாமல் ஒரு சுக்கும் நடக்காது..."
யமுனா மௌனமாகிறாள்.
அவர்களுடைய கானகப் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடப்பதில்லை என்றாலும் பல இடங்களிலும் அவள் அரசியல் கூட்டங்கள் கேட்டதில்லையா? எதிர்க்கட்சிக்காரர்கள் பன்றியை கழுதையைக் கூட்டத்தில் புகுத்துவார்கள். கட்சித் தலைகளின் நடத்தைகளில் அவதூறுகளைக் கோத்து வீசுவார்கள். அடுக்கு மொழி அலங்காரங்கள்; நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் - சொற்களே ஆயுதங்கள்! அத்தகைய அரங்குகளுக்கா அவள் தயாராக வேண்டும்?
அவளால் அதை ஒப்ப முடியவில்லை. உயர் பண்புகளுடைய பெண் ஒருத்தியின் மனசில் கற்பு நெறி எப்படி வேரூன்றியிருக்குமோ, அப்படித் தீர்மானமான அரசியல் பதவிகளைச் சாராத பொறுப்புக்குரியவளாகவே அவள் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த வெறுப்பு அவள் சுற்றுமுற்றும் கண்டறிந்ததால் வளர்ந்ததுதான்.
தொடக்கமே குழப்பம். வீடு வரும் வரையில் அவள் பேசவில்லை. பொட்டலில் ஒரு பசுந்தீவு - மாஞ்சோலையிடையே பெரியப்பாவின் பங்களா காட்சியளிக்கிறது. அங்கே அவர் வீடு கட்டிய காலத்தில் ரெயில் நிலையம் இருந்த ஒன்றரை மைல் தொலைவுக்கும் சில குடிசைகளைத் தவிர சுற்று வட்டத்தில் ஒரு வீடு கிடையாது. இப்போதோ அழகழகாகச் செப்புகள் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் எழும்பியிருக்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு குடிசைகளும் கட்சிக் கொடிகளும், தேநீர்க் கடைகளும் சாக்கடைகளும் பெருகி இருக்கின்றன. கடைவீதி ஒன்று குடிசைகளைப் பிரித்துக் கொண்டு வட்டத்தில் முதுகெலும்புபோல் ஓடுகிறது. நசநசவென்று குழந்தைகள் தெரியும் ஒரு கூரைக் கொட்டகை - பள்ளிக்கூடம் போலிருக்கிறது. தையற் கடைகள், கசாப்பு, மின்கடை, லாண்டிரி, சைக்கிள் கடை, அடகுக் கடைகள்...!
கடைகள், மனிதர்கள், அரசியல் கட்சிகள், தெருக்கள், குடிசைகள், சாக்கடைகள், கடன்காரர்கள்... இவை வளர்ச்சியின் அம்சங்கள் தாமோ? வளமையின் அறிகுறிகள் தாமோ?