"இந்தப் போலிகளுக்கெல்லாம் சாவு மணி அடித்து உண்மையான தியாகிகளை, நாட்டுப்பற்று உள்ளங்களைச் சேர்த்து, அரசியலைப் புனிதமாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நான் அரசியலுக்கு வந்தேன் மிஸ் யமுனா. நான் ஏற்கெனவே நம் வட்டத்திலேயே நாலு கூட்டங்களுக்கு காந்தி நூற்றாண்டு விழாக் கொண்டாட ஏற்பாடு பண்ணியாச்சு. உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, பர்ஸனாலிட்டி, பெண்ங்கற கிளாமர் எல்லாம் இருக்கு. நீங்க சும்மா மேடையில் நின்னாலே போதும், கூட்டம் தன்னால மயங்கிடும்" என்று சொல்லிவிட்டு அவன் கண்ணாடியில் அவள் முகம் தெரியாதபடி நகர்ந்து கொள்கிறான்.
"நீங்கள் நினைப்பதுபோல் என் எண்ணங்களில் பொதுக் கூட்டங்களும் தலைமைப் பதவியும் கொஞ்சமும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் நான் தப்பித் தவறிக் கூட அரசியல் பக்கமே போக விரும்பவில்லை."
"அப்பா?" அவன் சட்டென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறான்.
அவள் புன்னகை செய்கிறாள். நீண்ட முடி வறட்சியாகப் பறந்து முகத்தை மறைக்க வந்து விழுவதே அழகாக இருக்கிறது. நீலத்தில் கறுப்புப் பூ எல்லைக் கட்டிய கதர்ச் சேலை. புதைய புதைய அதே மாதிரியான சோளி. கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள். அணிமணிகள் வேறொன்றுமே இல்லையெனினும் அடுக்கு நந்தியா வட்டை மலர்ந்தாற் போன்ற புன்னகை முகம்.
"மிஸ் யமுனா, நம்முடைய நட்பு பிரமாதமான பலனைக் கொடுக்கப் போறதுன்னு நிச்சயமாக நான் நம்பறேன். அதனால் முதலிலேயே உங்கள் கருத்து தப்புன்னு சொல்லக் கூடாதுன்னு பார்க்கிறேன். இந்த மாதிரி இன்டலக்ச்சுவல்களெல்லாம் ஒதுங்கி ஒதுங்கித்தான் இன்னிக்கு அரசியல் சாக்கடை மட்டத்துக்கு வந்திருக்கு..."
சில வினாடிகள் மௌனம்.
தொடர்ந்து விடுவிடென்று கேட்கிறான்.