வண்டி மரத்தடியில் வந்து நிற்கிறது. கதவை அறைந்த ஓசை கேட்டுச் சோடாபுட்டி மூக்குக் கண்ணாடியும் டிரான்சிஸ்டர் கையுமாக ரவி வருகிறான்.
"என்ன ரவி?"
ரவி ஒரு சிரிப்புச் சிரித்துத் தலையை ஆட்டிவிட்டு உள்ளே ஓடுகிறான். இந்துநாத் "தாத்தா இருக்காரா? பரவாயில்லை. பூஜையில் இருந்தால் கூப்பிட வேண்டாம். அப்புறம் வந்து பார்க்கறேனென்று சொல்! நான் வருகிறேன் மிஸ் யமுனா" என்று அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் சொல்லிவிட்டுப் போகிறான்.
நீரு மாடிப்படியிலிருந்து விரைந்து இறங்கி வருகிறாள். ஒடி வந்து தழுவிக் கொள்கிறாள். உள்ளிருந்து சின்னம்மா ஈரக்கூந்தலும் நெற்றி நடுவில் துளி நீறுமாக வந்து புன்னகையுடன் வரவேற்கிறாள்.
நீரு எப்படி வளர்ந்திருக்கிறாள்? பாவாடை தாவணியுடன் இல்லை. நல்ல உயரம், பருமன், மஞ்சளில் இளம் பச்சை இலைகள் அச்சிட்ட நைலக்ஸ் - அதே கடுகு மஞ்சளில் குட்டைக் கையும் அரை முதுகுமாகச் சோளி.
"பழனி! பெட்டியை மாடியில் கொண்டு வை" என்று உத்தரவிடுகிறாள் சின்னம்மா. இடுப்பு நிஜாரைச் செருகிக் கொண்டு வெற்று மேனியாய் ஒரு பத்து வயதுப் பையன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறான்.
முன்பு மாடியில் ஓர் அறையும் வராந்தாவுந்தான் இருந்த நினைவு - இப்போது இரண்டு பக்கங்களும் இரண்டு படுக்கை அறைகள், குளியலறைகள் இருக்கின்றன. மொஸெய்க் தரையில் முகம் தெரிகிறது. நீருவின் அறையில் நுரை மெத்தைப் படுக்கையில் நேர்த்தியான பூவிரிப்பு. மெல்ல விசிறி சுழல்கிறது. ஓரத்தில் முகம் பார்க்கும் கோழி முட்டை வடிவக் கண்ணாடி கூடிய ஒப்பனை மேசை. அதில் தான் எத்தனை வகையான குப்பிகள், ஜாடிகள்!
"நீ இங்கே குளிச்சு டிரஸ் பண்ணிக் கொள்ளலாம் யமு. கிணற்றில் 'போர்' போட்டப்புறம் மேலே