மெள்ளப் பூஜை அறைப் பக்கம் செல்கிறாள்.
அடிவைக்குமுன் தூக்கி வாரிப் போடுகிறது, அங்கிருந்து வரும் ஒலி.
"மலையாளத்தான் இருக்கும் வரை உருப்படாது..."
'பெரியப்பா யாரிடம் என்ன பேசுகிறார்?'
"ஏதோ ஒரு பையனைச் சுமாராகப் பார்த்து இந்தப் பெண்ணை, நம்மாலானது, பிடிச்சுக் கொடுக்கலாம்னு பார்க்கிறேன். காந்தியாவது பிரசாரமாவது?"
ஒட்டுக் கேட்பது இரத்தத்தைச் சுவைப்பதற்கொப்ப அருவருப்பைக் கொடுக்கிறது.
"என்ன பெரியப்பா? பூஜையின் போது பேசமாட்டீர்கள் என்று வெளியே இருந்தேன். பேச்சுக் குரல் கேட்டது. பூஜையின் இடைவேளையா?"
"உன்னைப் பத்தித்தான் கேட்டேன். இந்துநாத் வந்திருந்தானா?"
"உம்..."
பெரியப்பா கற்பூரத்தைக் கொளுத்திச் சம்புடத்திலுள்ள சாளக்கிராமங்களுக்குக் காட்டுகிறார். பெரியப்பா நல்ல சிவப்பு. வெளியில் அலையாத மினுமினுப்பு; தலை முழுதும் வழுக்கை.
"கற்பூரம் ஒத்திக் கொள்..."
காதில் துளசியுடன், கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் அபிஷேக நீரைக் கொடுக்கிறார். உள்ளுக்குள் ஏதோ ஒன்று கையை நீட்டாதே என்று தடுக்கிறது.
'மலையாளத்தான் யார்?...யாரை...?'