தண்ணீர் கொட்டுகிறது. ஒரு கெய்ஸர் வாங்கி வையுங்கோன்னா தாத்தாவுக்கு இன்னும் மனசு வரல..."
"பரவாயில்லை நீரு. நான் கிணற்றங்கரையிலேயே துவைத்துக் குளிப்பேன். எனக்கு இந்த ஆடம்பரங்கள் தான் பழக்கமில்லை..."
"அதெல்லாம் உங்க காட்டிலேதான் தலையெழுத்து. இங்கே என்ன கஷ்டம்! பழனி! பழனி! அம்மாவுக்கு வெந்நீர் இங்கே கொண்டு வை!"
"எனக்கு வெந்நீரே வேண்டாம். நான் என்ன மாப்பிள்ளையா, இப்படி உபசாரத்துக்கு?"
இதற்குள் சின்னம்மா காப்பியை எடுத்துக் கொண்டு வருகிறாள்.
"அடடா... நீங்க ஏங்க எடுத்து வரணும்?..."
சின்னம்மா பதிலுக்கு புன்னகையுடன் போகிறாள்.
குளியலறையில் அமிழ்ந்து குளிக்கும் பிளாஸ்டிக் தொட்டி, துடைக்கும் துண்டுகள், சோப்பு வாசனைகள். இரண்டு வாளிகளில் வெந்நீர் வருகிறது.
இத்தகைய ஆடம்பரங்களை யமுனா முன்பு இங்கு கண்டதில்லை. வாழ்க்கையின் இன்பங்களெல்லாம் இத்தகைய சுகங்களில்தான் இருக்கின்றன என்று தான் எல்லோரும் கருதுகிறார்கள்.
நீரு கல்லூரியில் புகுந்த முதல் ஆண்டே தவறிப் போனாள்.
தந்தை உத்தரப்பிரதேசத்திலோ ராஜஸ்தானத்திலோ ஐ.ஏ.எஸ். வர்க்கம். இவளும் ரவியும் படிப்புக்காகவே பாட்டனார் வீட்டில் தங்கி இருக்கின்றனர். தோழிகள் அரட்டை. வஞ்சனையில்லாத நாவுக்கு வேண்டிய நல்ல உண்டிகள். சினிமாக்கள் - இப்படி உல்லாசப் பொழுது போக்காக இவளுக்குப் போகின்றன நாட்கள். மேனி சம்பங்கிப் பூவின் மென்மையோடு மினுமினுக்கிறது. இனி... திருமணம்.