"மிக்க நன்றி. ஆறு சமுத்திரத்தில் விழுந்தாலென்ன, சமுத்திரம் ஊரில் புகுந்து ஆற்றை விழுங்கினாலென்ன, நீயே என்னை மாற்றி விடு. வம்பே இல்லை!"
"உன்னை மாற்ற முடியாதுன்னு நினைக்கிறியா?"
"நான் அப்படிச் சொன்னேனா?"
நீரு கண்களில் ஒளி தெறிக்கச் சிரிக்கிறாள். "இப்படி வைராக்கியமாக இருப்பவர்கள் தான் 'காதல்'ன்னு ஒண்ணில் இடறி விழுந்து விடுவார்கள். பிறகு பார்க்கணுமே? சற்று முன் சொன்னியே? அதப் போல இந்த ஆறு எந்த சமுத்திரத்தில் போய் விழுதோ?"
பிறகு உடனே தொடர்ந்து "யார் கண்டது? நாளைக்கே நீ ஒரு மந்திரியின் 'மனைவி'யாராக ஆகலாம். உனக்கு அந்த அளவுக்கு 'பிராஸ்பெக்டஸ்' இருக்கிறது" என்று கிண்டுகிறாள்.
"போகிறது, நீயே 'மந்திரி'யாராக ஆவாய்னு சொல்லாம விட்டியே?"
"அப்படிச் சொன்னால் நான் மாட்டேன்னு முறைப்பே? இப்படிச் சொன்னதால் ஒப்புக் கொள்கிறாய். ஏ...ய்! யாரடி அந்த ஆள்?"
இம்மாதிரி நாள் முழுதும் பேசிக் களிக்க நீரு தயார் தான். ஆனால், பெரியப்பாவின் குரல் வீச்சாக ஒலிக்கிறது.
"யமுனா! யமுனா!..."
யாரேனும் கடிதம் எழுதியிருக்கிறார்களோ?
பரபரப்புக்குக் காரணம் ஒரு அஞ்சலட்டைதான்.
"இந்தா பாரு, இது... யாரிது?"