எங்கேயோ அறிமுகமில்லாத கானகப் பாதையில் அடிவைப்பதைப் போலிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று நாள்தாளில் இன்றைய நிகழ்ச்சிகளின் வரிசைப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
நல்ல வேளையாக அதில் அறிவிப்பு வரவில்லை. சுவரொட்டிகளை எங்கே ஒட்டினார்களோ, பெரியப்பா கண்களில் பட்டிருக்க நியாயமில்லை என்று தெம்பு கொள்கிறாள். ஆனால் சொன்னால் சொன்னபடி இந்துநாத் அம்பாஸடர் வண்டியில் வந்து இறங்கிய போது வேர்த்து கொட்டுகிறது. பெரியப்பா வறுத்த முந்திரிப் பருப்போடு மாடு கறந்த பின் புதிய பாலில் கலந்த காப்பியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறார்.
"நமஸ்காரம் மாமா?"
"அடேடே... கார் வரதே யாரோன்னு பார்த்தேனே. வா, கண்ணிலேயே காணோம்?"
"ஒண்ணுமில்லே தலைவர்கள் பண்ணும் மானக் கேடு - தலை நீட்ட முடியலே நமக்கு. நம்ம வட்டத்தின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் போட்டுக் காந்தி நூற்றாண்டை நடத்தணும்னு பார்க்கறேன். சரியாக போகிறது..."
"யாருக்குப் பிறந்த நாள்?"
"யாருக்குப் பிறந்த நாள்? காந்திக்கு. அதோட, இந்த வட்டத்துக்கே பெரியவராக இருக்கேள் - அதோ காந்தி பரம்பரை வழி. உங்களுக்குத்தான் கொண்டாடக் கூடாதா? உங்களைப் போல் பெரியவாள்ளாம் ஒதுங்கி மறக்கும்படி பண்ணினதே தப்பு. எப்படியும் இந்தப் பிளவு எப்படிப் போறதுன்னு பார்த்துத்தான் யோசிக்க வேண்டியிருக்கு; இப்பக் கூட ஒரு மீட்டிங்குக்குத்தான் போறேன். யமுனாஜி, நமஸ்காரம்!" மாடிப்படியின் கீழ் தயங்கி நிற்கும் அவளுக்கு ஒரு பெரிய கும்பிடாகப் போடுகிறான்.
"எங்கே கிளம்பறாப்போல, நான் சகுனத் தடையா வந்திருக்கேனா? சேவா நிலையம்