வரைக்குமா? கிளம்புங்க. உங்களை 'டிராப்' பண்ணிடறேன்."
அவள் புன்னகை பூக்கிறாள், "அதெப்படி நிச்சயமாகக் கேட்கிறீர்கள்?"
"பின்ன நீங்க எங்க போறிங்கன்னு புரிஞ்சுக்க முடியாதா?"
கேட்டுக் கோண்டே அருகில் நகர்ந்தபடி கண்களால் ஒரு அதட்டல், 'அசட்டுப்பிசட்டென்று பேசாமல் வண்டியில் ஏறிக்கொள்' என்று பொருள்பட, அவள் பின்புறம் ஏற கதவு திறக்கிறான். அந்தப் பெரிய வண்டியில் முன்னே ஒரு ஓட்டி அமர்ந்திருக்கிறான். இந்துநாத் அவன் அருகில் தான் அமருகிறான்.
வண்டி எல்லை கடக்கும் வரையிலும் அவன் பேசவில்லை.
யமுனா குழப்பத்தை மறைத்துக் கொள்ள வெளியே பார்வையை ஓடவிடுகிறாள்.
சுவரில் புதியவைகளாகப் பளீரென்ற கறுப்பு சிவப்பு வண்ணக் கொட்டை எழுத்துத் தாள்கள்.
"அறிஞர் அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் விழா! முத்தமிழ்ச் செல்வி, இசைக்குயில், கலையழகி, அருணா -
அண்ணா கதைப் பாட்டு.
அண்ணா வழி நடக்கும் இளவல்கள் செய்யும் சாதனைகள்.
அனைவரும் திரண்டு வருக! செல்வி அருணா!
அண்ணா புகழ்ந்து ஆசி கூறிய செல்வி அருணா!"
எல்லாத் தாள்களிலும் அருணா உதயசூரியன் டாலர் சங்கிலி மார்புக்குழியில் பளிச்சிட, கறுப்புப் பின்னணி சிவப்பு ரோஜாப் புடவையில் சிரிக்கிறாள்.