"யமு? நீ எங்கும் போகலியா?" என்று ஒவ்வொருவரும் கேட்கும்போதெல்லாம் அவள் உடம்பு சரியில்லாதது போல் பாவனை செய்து கொள்கிறாள்.
வீட்டில் ஒருவரும் இல்லை என்று அறிந்த பின் தொலைபேசியை எடுத்து, அந்த வட்டத்துக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தைக் கூப்பிடுகிறாள். "ஹலோ... இந்துநாத் இருக்கிறாரா?"
"ஸ்பீக்கிங்..."
"யமுனா பேசறேன். உங்களை என்ன அன்றைக்குப் பிறகு காணவே இல்லை?"
"நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க தான் அரசியல்னாலே அலர்ஜின்னு தீத்துட்டீங்களே?"
"இல்லை, எனக்குச் சில விஷயங்கள் கேட்க வேண்டும், பேச வேண்டும். நீங்க வந்தால் கேட்கலாம் என்று நினைக்கிறேன்."
"என்ன விஷயம்? ஃபோனில் சொல்ல முடியாத விஷயமா யமுனா?"
அவளுக்கு முகம் சிவந்து போகிறது.
"இல்லே. சுடர்ப் பொறின்னு ஒரு அமைப்பில் பேச எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பெரியப்பாவுக்கு அது கத்தி கபடாக் கட்சியைச் சார்ந்ததுன்னு ஒரே கோபம். கடிதாசியையே கிழிச்சிப் போடச் சொல்றார். அப்படியெல்லாம் அதில் ஒன்றுமில்லை. உங்களிடம் கேட்கலாம்னு..."
"டோன்ட் வொர்ரி. கட்டாயம் நீங்க போய்ப் பேச நான் ஏற்பாடு செய்கிறேன். இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தை விடுவது முட்டாள் தனம்."
"நீங்கள் புரிந்து கொண்டது போல அவர் புரிந்து கொள்ளலியே?..."