"கவலை வேண்டாம். நான் நாளையே போய் ஏற்பாடு செய்யறேன்."
"அப்படியென்றால்?"
"அந்த இடத்தில் மிஸ் யமுனா ஏற்பாடு செய்து, நாள் கொடுத்துவிட்டு வருவேன்னு அர்த்தம்."
"ரமேஷ்னு பேர் போட்டிருக்கு..." என்று முகவரியைப் படிக்கிறாள்.
"அப்ப சரியோ, குட்லக்? நாளைக்கு வரேன்" என்று விடை பெறுகிறான்.
அவன் மறுநாள் சொன்னபடி வரவில்லை. யமுனா புதிய குரல் கேட்கும்போதெல்லாம் அவன் வருகிறான் என்று பார்த்து ஏமாந்து போகிறாள். வழக்கம் போல் நாள்தாளைப் பார்த்து, 'பாங்கி தேசியமயம், ரபாட், கொட்டித் தீர்க்கும் மழை, பிவாண்டி' என்று பெரியப்பாவின் மனசுக்கேற்ப அரட்டையடிக்க அவர் வயசுக்கொத்தவர்கள் யாரேனுந்தான் வந்து போகிறார்கள்.
நான்கு நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலையில் அவன் தலையைக் காட்டுகிறான். நீரு ரவி இல்லை; சின்னம்மா சமையற்காரியுடன் பின்புறம் ஏதோ வேலையில் மூழ்கிக் கிடக்கிறாள். பெரியப்பா கூட்டுறவுச் சங்க போர்டுக் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவள் அவனை வரவேற்கிறாள்.
"பெரியப்பா இல்லையா?" என்று அவன் விஷமமாகக் கண்ணைச் சிமிட்டுகிறான். அது எப்படியோ இருக்கிறது.
"இல்லை... உட்காருங்கள்."
"நாளை ஞாயிறு மாலை ஐந்தரைக்கு, 'சுதா' நுங்கம்பாக்கத்தில் - முற்போக்கு இளைஞர் மன்றத்தில் யமுனா காந்தீய இலட்சியங்கள் - உரை. அரேஞ்ச்ட்."
அவளுடைய விழிகள் அகலுகின்றன. "அப்ப எப்படிப் போவது?... பெரியப்பா இப்போது வருவார். நீங்களே பக்குவமாகச் சொல்லிவிடுங்கள்..."