பெரியப்பா ஏன் அம்மாவை இழுக்க வேண்டும் இதில்? கண்ணுக்குத் தெரியாக் காற்றுக்கு நடுநடுங்கும் ஒட்டடைத் தூசு போல் அவளுள் ஓர் நடுக்கமும் உண்டாகிறது.
"இது யாராக இருந்தாலும், என்னைக் கேக்காம இங்கே ஒரு பயலையும் விடவேண்டாம். இந்த மாதிரிக் கூட்டத்துக்கெல்லாம் நீ போகக்கூடாது, என்ன?"
"எனக்கு யாரென்றே தெரியவில்லையே, பெரியப்பா?"
"அதெல்லாம் தெரியாது. கடுதாசியைக் கிழித்தெறி. நீ இதற்கெல்லாம் பதில் கூட எழுதக் கூடாது!"
இது அலர்ஜியா? இந்தக் கார்டில் கட்சிச் சின்ன வாடை கூட இல்லையே? ஆனால் இம்மாதிரியான இலக்கியம், சமுதாயம் என்ற போர்வைகளைப் போர்த்துக் கொண்டு தான் அந்த அறிவியல்வாதிகள் கட்சி வலையை விரிக்கிறார்கள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.
மேல் - கீழ் என்ற பாகுபாடுகள் இருந்தே தீர வேண்டும் என்ற உடும்புப் பிடிக்குள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஆத்திரம் வருகிறது.
தனிமையில் அந்தக் கசங்கிய அட்டையைப் பிரித்துப் பார்க்கிறாள். ஒவ்வோர் எழுத்திலும் கதிர் ஒளிந்திருப்பதைப் போல் பிரமை உண்டாகிறது. எதிரான கொள்கைக்காரர்களென்றால் அழைப்பை கிழித்துப் போட்டுவிட்டு ஒளிந்து கொள்வதா நெறியுள்ள செயல்? அது தானன்றோ அவளுடைய களம்?
இதற்கு என்ன செய்வதென்று இரவு பகலாய்ச் சிந்தனை செய்கிறாள்.
பெய்யாத மழை கொட்டித் தீர்த்து, ஏரி குளங்களை நிரப்பிவிட்டு, குடிசைகளை மிதக்கவிட்டு, இன்னமும் தூற்றலும் முணுமுணுப்பாக இருக்கிறது. மாலை ஐந்து மணியளவில் பெரியப்பா, குச்சியைச் சுழற்றிக் கொண்டு பேட்டை நிலவரம் அறியப் போகிறார். நீருவும் ரவியும் புதிய சினிமாவுக்குப் போயிருக்கின்றனர். சின்னம்மா எங்கோ மடத்தில் கந்தபுராணம் கேட்கச் செல்கிறாள்.