சொல்லலை. நானும் கேட்கலை. நீயே சொல்லு" என்றாள் கெளரி.
"பக்கத்து அக்கிரகாரத்துலேந்து நேத்து ஏழெட்டு பேர் என்னைத் தேடிண்டு வந்தா ! யாரோ ஒருத்தன் தாலி கட்டின பெண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு சமுத்திரம் தாண்டிப் போயிட்டானாம். வெளி தேசம் போய் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிண்டு இருபது வருஷம் அவளோடு வாழ்ந்தப் புறம், அவள் காலமானதும், இப்ப ஊர் திரும்பி வந்து இந்தப் பெண்டாட்டியோட வாழப்போறேங்கறானாம். ‘சாஸ்திரம் இதுக்கு ஒத்துக்குமா? நீங்க என்ன சொல்றேள்’னு ஊரார் என்னைக் கேட்க வந்தா. சாஸ்திரம் கண்டிப்பா ஒத்துக்காது. ஜாதிப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்னு நான் தீர்ப்பு சொன்னேன்.
“உங்க பெண் பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே! அதுக்கு என்ன சொல்றீங்க? அதை மட்டும் உங்க சாஸ்திரம் ஒப்புக்கறதாக்கும் !" என்று என்னையே மடக்கி அவமானப் படுத்திட்டு போயிட்டா!
இதையெல்லாம் கேட்டுண்டிருந்த உன் செல்லம் பாகீரதி ராத்திரி என் கிட்டே அழுதுண்டே வந்து என்ன சொல்லித்து தெரியுமா? அதை என் வாயாலே திருப்பிச் சொல்றதுக்கே நாக்கூசறது!"
பாகீரதி என்ன சொன்னாள் என்று அத்தை கேட்க வில்லை. அவளே அதை ஒரு மாதிரி ஊகித்துக் கொண்டாள்.
“சரி, அண்ணா! இதுக்கெல்லாம் மனசைப் போட்டு குழப்பிக்காதே! நம்ம குழந்தையோட சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் !" என்றாள்.
இச்சமயம் பாடசாலைப் பையன்களில் ஒருவன் கனபாடிகள் எதிரில் வந்து நின்றான்.
"என்னடா?"
"நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த வேத பாடத்தை ஸ்லேட்டில் எழுதிக்கொண்டு வந்திருக்கேன்," என்றான்.
"வேதத்தை எழுத்தால் எழுதக் கூடாதுடா ! ‘எழுதா மொழி’ன்னு சொல்லுவா அதை. சப்த