சாஸ்திரம்னு சொல்லிண்டு வைதிகத்துல மூழ்கிக் கிடப்பார். நீங்கதான் அவளை கவனிச்சுக்கணும். அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். நீங்க அவள் பேரில் வெச்சிருக்கும் அன்பும் பாசமும் எனக்குத் தெரியும், அவளுக்கும் உங்க மேல அளவு கடந்த பிரியம். வாழ்ந்தால் அத்தையாட்டம் பணக்காரியா, தோரணையா, வாழணும்னு அடிக்கடி சொல்லிண்-டிருப்பான்னு உங்கம்மா சொல்லிட்டுப் போயிருக்கா" என்றாள் அத்தை.
அழகாகப் பின்னிவிட்ட தாழம்பூக் கூந்தலில் பாகீரதி புது மணப்பெண்போல் ஜொலித்தாள்.
அவளைப் பார்க்கப் பார்க்க அத்தைக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அவளை மேலும் அழகு படுத்திப் பார்க்க விரும்பினாள். பாகீரதியின் நெற்றியில் குங்குமம் இட்டு, தான் அணிந்திருந்த காசு மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டு கண் குளிர அழகு பார்த்தபடி "எத்தனை அழகுடி ,நீ மகாலட்சுமியாட்டமா!" என்று தன் புறங்கைகளால் அவள் கன்னத்தில் அழுத்தி திருஷ்டி சொடுக்கிப் போட்டாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலா "எனக்கு பயமா இருக்கு, அத்தை ! அப்பா பார்த்துட்டா அப்புறம் நரசிம்மாவதாரம்தான்!" என்றாள்.
"பார்க்கட்டுமே, என்ன நடந்து போச்சு இப்பl என் ஆசைக்கு அலங்காரம் பண்ணிப் பார்த்தேன். இது பெரிய தப்பா? அவன் வரட்டும். நான் பேசிக்கிறேன்..." என்றாள் அத்தை.
அவர்கள் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் அங்கு வந்து விட்டார். பாகீரதியின் தகாத அலங்காரத்தைக் கண்டு, சூள் கொட்டி, திகைத்து நின்றார். பிறகு "கெளரி ! என்ன இதெல்லாம்!" என்று கோபித்தார்.
"நான்தான் தாழம்பூ வெச்சு தலை பின்னி விட்டேன். எப்படி இருக்கா பாரு! அவள் சின்னக் குழந்தைடா! அவளுக்கு ஆசை இருக்காதா அலங்காரம் பண்ணிக்க !"
"சாஸ்திர விரோதம்னு தெரியாதா உனக்கு ! தப்பு கெளரி, ரொம்பத் தப்பு!"
"அவள் கூந்தலை எடுக்காமல் வைத்திருப்பது உனக்குத் தப்பாத் தெரியலே ! தலைபின்னிப் பூ வைக்கறது மட்டும் தப்பாக்கும். நீ செய்தது நியாயம்னா நான் இப்ப செஞ்சதிலேயும் தப்பில்லே…