"என்ன சொன்னே? வேதம் படிக்க…" என்று இழுத்தார் கனபாடிகள்.
"படிக்கப் போறானான்னு கேட்டேன்."
"வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஓதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஓதணும். மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லணும்,"
வாசலில் வந்து நின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள்.
பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு "வாங்க அத்தை ! கார்த்தால் லேந்து உங்க நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு !" குதூகலம் பொங்க வரவேற்றாள் பாகீரதி.
"கையில என்ன அது செம்பு!" என்று கேட்டான் கிட்டா.
"கங்கைச் செம்பு, தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா, அவா கொண்டு வந்து கொடுத்தா. புண்ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றாள் கெளரி அத்தை.
"இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்" என்றான் கிட்டா.
"தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரவாயில்லே" என்றாள் கெளரி.
"பஸ் லேட்டோ?" என்று கேட்டார் கனபாடிகள்.
"ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்" என்றார் கெளரியின் கணவர்.