கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து "நமஸ்காரம் செய்து "ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்றனர் கெளரி தம்பதியர்.
"முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?" என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள்.
"உங்களுக்கு எப்ப வர செளகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்" என்றார் கெளரியின் கணவர்,
"சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து நடத்திடவேண்டியதுதான்!" என்றார் கனபாடிகள்.
"நீங்க வரணும்; அதுதான் முக்கியம்."
"என்னால முடியும்னு நினைக்கிறயா, கெளரி ! வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?"
"முகூர்த்தம் நடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசிர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம். நாங்க ஒரு "ப்ளெஷர்" ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்" என்றார் கெளரியின் கணவர்.
"கிட்டா, அந்த பஞ்சாங்கத்தை எடு" என்றார் கனபாடிகள்.
கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான்.
அதைப் புரட்டி, "அசுவனி, பரணி என்று நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணி, "மூர்த்திக்கு மூல நட்சத்திரம். ஆண் மூலம் அரசாளும்னு சொல்லுவா. அரசாளப் போறானோ இல்லையோ, அரசமரத்தை ஆண்டுண்டிருக்கான்" என்று சொல்லிச் சிரித்தார். அவர் இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாயிற்று.