"மூர்த்தியின் முழுப்பெயர் என்னன்னு தெரியலே." என்று இழுத்தார் கெளரியின் கணவர்.
"சாம்பமூர்த்தி. மூல நட்சத்திரத்துக்கு இந்த மாசம் பதிமூணாம் தேதி பொருத்தமாயிருக்கு" என்றார் கனபாடிகள்.
"பதிமூணுன்னா இன்னும் ஆறே நாள் தானே? அதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா அண்ணா!" என்று கவலைப்பட்டாள் கெளரி.
"நீ என்ன கலியாணமா பண்ணப்போறே? சுவீகாரம் தானே? ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடலாம். ஏழெட்டு வைதிகாளைக் கூப்பிட்டா போதும். நான் வறேன். வெள்ளிக் கடை கிட்டப்பா வருவான். ஜாம்ஜாம்னு நடத்திடலாம். கார்த்தால ஒன்பது பத்தரை மிதுன லக்னம் முகூர்த்த நேரம்" என்றார் கனபாடிகள்.
"முகூர்த்தப் பத்திரிகையை உங்க கையாலயே எழுதி மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்துட்டா, நாங்க சாயந்திரமே புறப்பட்டுடலாம்" என்றாள் கெளரி.
"நாலு மணிக்கு மேல புறப்படுங்க. ராகுகாலம், வெயில் ரெண்டுமே போயிடும்!"
"பாகீரதியை என்கூடவே அழைச்சுண்டு போறேன் அண்ணா! இடையிலே இன்னும் அஞ்சே நாள்தானே இருக்கு" என்றாள் கெளரி.
"அப்படிச் சொல்லு. அதுக்குத்தான் வந்தேன்னு சொல்லு ! செல்ல மருமாளாச்சே!" என்று மறுபடியும் சிரித்தார் கனபாடிகள்.
"அவளும் இந்த வீட்டில எத்தனை நாளைக்கு கூண்டுக் கிளி மாதிரி அடைஞ்சு கிடப்பா? இப்பத்தானே சந்தர்ப்பம். சமையல்காரரும் வந்தாச்சு, துணைக்கு கிட்டா வேற இருக்கான்."
"எல்லாத்தையும் யோசனை பண்ணின்டு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!" என்றார் கனபாடிகள்.