"அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசனும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான், உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?"
"அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை நம்மால மாத்தி எழுத முடியாதே"
"ஏன் முடியாது? மனசுவச்சா எழுதலாம்" என்றாள் கௌரி.
"நீ என்ன சொல்றே, கெளரி!"
"உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்?
அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வயசிலே கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில நிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?"
“நீதான் இருக்கயேம்மா, அப்படி அனாதையாவா விட்டுடுவே?"
"நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின்னு என்னால உடைச்சுப் பேச முடியலே, நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்."
"புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணுங்கறே, அதானே? அது என்னால முடியாது. சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்."
"செஞ்சா என்ன ஆயிடும்?"
"கெளரி உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்குமா! ‘சாஸ்திரம் படிச்சவராம் ! யாகம் பண்ணவராம்! எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்கற கதையா கனபாடிகள்