சிறுகதை - நீ இன்றி நான் இல்லை - K.சௌந்தர்
காலைக் கதிரவன் சுள்ளென்று உரைத்து மணி பத்தாகிவிட்டதை உணர்த்தினான். மெல்ல எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான் முகிலன். இது அவனுக்கு பழக்கமில்லாத ஒன்று. எப்போதுமே ஆறு மணிக்குமேல் அவன் தூங்கியதில்லை. நேற்றிரவு பலவித மன உளைச்சலால் நெடுநேரம் விழித்திருந்தது ...இப்போதும் மனம் பாரமாக இருந்தது அவனுக்கு. இன்றோடு எல்லாம் முடிந்துவிடும். இனி அவளை பார்க்க வேண்டும் என்றால் கூட முடியாது. அவள் சொந்த ஊருக்கே போவதாக சொல்லித் தானே வேலையை ராஜினாமா செய்கிறாள். நினைத்தவுடன் போய் நிற்கும் தொலைவிலா இருக்கிறது வயநாடு? முன்பே தெரிந்திருந்தால் அவள் ரிசைன் பண்ண விண்ணப்பம் கொடுத்த போதே ஏதாவது காரணம் சொல்லி தடுத்திருக்கலாம். இவ்வளோ நாள் நல்ல பிள்ளையாக இருந்த மனம் இப்போது அவளிடம் போய் நின்றுகொண்டு திரும்பி வரமாட்டேன் என்று முரண்டியது.
வர்ஷிதா..அதுதான் அவள் பெயர். முன்பெல்லாம் எப்படியோ...இப்போதெல்லாம் அவள் பெயரை நினைத்தாலே மனதில் ஒரு சில்லென்ற சாரல் வீசுவதை போல் உணர்ந்தான் அவன். வர்ஷிதா நீ ஏன் என் வாழ்வில் வந்தாய் , வேறு பாதையில் செல்லவேண்டிய என்னை ஏன் இப்படி உன் வழிக்கு இழுக்கிறாய்? நான் என் வழியில் செல்வதா ?அல்லது உன் பின்னோடு வாழ்வை இணைப்பதா? அறிவிற்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் மனம் தான் வெற்றி பெறும் என்பார்கள். என் வாழ்வில் எப்படியோ? ஒரு பெருமூச்சுடன் அலுவலகத்துக்கு தயாரானான் அவன். ஏற்கனவே லேட் , பாதி நாளாவது ஆபீஸ் போகலாம் , அவளை கடைசியாக ஒரு முறை பார்க்க ஒரு வாய்ப்பு. பைக்கை எடுக்கும்போது மறுபடியும் அவள் நினைவு. அன்று அவள் யாரிடமோ 'சாருக்கு காரைவிட பைக் தான் பொருத்தமா இருக்கு' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டபின் அவன் பைக்கில் தான் ஆபீஸ் வருவது.
முதல் முதலாக அவள் அந்த ஆபீசில் அடியெடுத்து வைத்தது நினைவில் வந்தது. அங்கு அடிக்கடி கல்லூரி மாணவிகள் சைட் விசிட் என்று வருவதுண்டு. அன்றும் அப்படிதான் ஏதோ சலசலத்துக் கொண்டு நான்கைந்து மாணவிகள் அவனைக் கடந்தபின் தனியாக மானின் மருண்ட பார்வையோடு அவனை நெருங்கினாள் அவள். "சார் இவிடே சிவநேசன் சார் ரூம் எது " என்று அவள் அரைகுறை தமிழில் கேட்க அவனுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது.
"தமிழ் , தெரியலைன்னா ஒழுங்கா இங்கிலீஷிலேயே பேசுங்க, எனக்கு இங்கிலீஷும் தெரியும்" என்று எரிந்து விழுந்துவிட்டு வழி சொன்னான் அவன்.
"சாரி சார் " என்றவள் ஒயிலாக திரும்பி நடந்து சென்றாள்.
ஏன் அவளிடம் கோபமாகப் பேசினோம் என்று அவனுக்கே தெரியவில்லை, ஒருவேளை அவ்வளோ அழகிய பெண் தமிழை கொலை செய்ததால் வந்த வெறுப்பாக இருக்கலாம்.
சற்று நேரத்தில் போனில் 'முகிலன் கம் டு மை கேபின் ' என்று அவனது மேலதிகாரி சிவநேசனின் குரல் கேட்டது. ஹீம் இப்போ என்னவோ என்று அலுத்தபடி சென்று பார்த்தால் அங்கே அந்த 'அவள்' உட்கார்ந்திருந்தாள்.
"முகிலன் மீட் மிஸ் வர்ஷிதா..புதுசா அப்பாயிண்ட் ஆனவுங்க, உங்க கிட்டே ட்ரைனியா போட்டிருக்கேன். கொஞ்சம் பாத்து எல்லாம் சொல்லிக் கொடுங்க” , என்றவர் அவளை நோக்கி கிலோ கணக்கில் ஜொள்ளு விட்டபடி “ நீ போம்மா வர்ஷிதா..ஏதாவது டவுட்டுன்னா கண்டிப்பா என்னை விளிக்கி " என்றார். அவனுக்கு பிடிக்காத விஷயம் இதுதான். ஒரு பெண் அழகாயிருந்தால் அவளுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்வது,
முகத்தை வேறு பக்கம் திரும்பியபடி " அவ்வளோதானே சார் , ஓகே " என்றபடி விருட்டென வெளியேறிவிட்டான் முகிலன். திரும்பியே பார்க்காமல் சீட்டுக்கு வந்து சேர்ந்தான் அவன். அவனது வேகநடைக்கு அவன் பின்னே அவள் ஓடித்தான் வரவேண்டியிருந்தது.மூச்சு வாங்க நின்றவளை சற்று நேரம் ஆசுவாசப் படுத்த விட்டுவிட்டு ஆரம்பித்தான் அவன்.
“மேடம் உங்களை பத்தி சொல்லுங்க” என்றான் ஆங்கிலத்தில்
அவள் அவள் படித்தது மற்ற விவரங்களை ஆங்கிலத்தில் கூறிவிட்டு சிறிய தயக்கத்தின் பின்
“ஒரு சின்ன ரிக்வஸ்ட் சார், நீங்க என்கிட்டே தமிழ்லதான் பேசணும். என் தாய்மொழியும் தமிழ் தான். ஆனால் கேரளாவிலேயே நாலு தலைமுறையா செட்டில் ஆயிட்டதாலே தமிழ் பேசற சான்ஸ் இல்லை. இப்பயாவது கத்துக்கணும்னு ஆசைப்படறேன்” என்றாள் ஆங்கிலத்தில்.
அவன் மனம் சற்று மகிழ்ச்சியடைந்தது "இட்ஸ் ஓகே ..நீங்க நறுமுகை கிட்டே நல்லாவே கத்துக்கலாம்..." என்றவன்
" இதோ பாருங்க மேடம், காலையில் ஒன்பது மணிக்கு ஷார்ப்பா ஆபீஸ்ல இருக்கணும். லேட்டானா பர்மிஷன் கேக்கணும்.இல்லைன்னா எனக்கு கோபம் வந்துடும். அப்புறம் இன்னிக்கி உங்களுக்கு இங்கே நடக்கிற வேலைகளை பத்தி என்னோட பி ஏ சொல்லுவாங்க. நாளையிலிருந்து நீங்க வேலையை ஆரம்பிக்கலாம் . நறுமுகை , யூ டேக் கேர் மா " என்று அவனது பி ஏ விடம் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.
அவ்வளோ நேரம் ஏதோ தேவகானத்தை கேட்டதுபோல அவனது குரலைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் அவன் வெளியேறியதும் பின்னாலேயே ஓடி "சார்....சார் ….உங்க மொபைல் நம்பர் வேணுமே" என்றாள்
"என் நம்பர் உங்களுக்கு எதுக்கு ?” என்றான் அவன் .
"நீங்கதானே லேட்டா வந்தா இன்போர்ம் பண்ண சொன்னீங்க" என்றாள்