சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03
ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி
ஹாய் ப்ரண்ட்ஸ். அடுத்த கதையை கொடுக்க ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன், மன்னிக்கவும். கொஞ்சம் வரலாற்றை திரும்பி பாத்தோம்னா, இதுக்கு முன்னாடி இருந்த கதையின் முடிவில். நம்ம தாத்தா பாட்டி ரெண்டு பேரும் மருத்துவமனைவாசலை அணைத்தபடி நின்ற காட்சியை நான்கு கண்கள் ஏக்கமாக பார்த்ததாக எழுதியிருந்தேன். அந்த கண்களுக்கு சொந்தமானவர்களின் கதையைத்தான் இன்று பார்க்க போறோம். தயாரா?
மருத்துவமனை! இரவில் இருந்து பணி செய்து கொண்டிருந்ததால் உண்டான களைப்பை மறைத்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள். அடுத்த ஷிஃப்ட்கான நர்ஸ் வந்துவிட்டால் தான் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாமே, என எண்ணியபடியே அடுத்த அறையில் அட்மிட் ஆனவரை காணச் சென்றாள்.
தூரத்தில் இருந்தபடியே அங்கு கண்மூடி படுத்திருந்த பெண்மணியை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது. “இவங்களா? கடவுளே! உனக்கு போர் அடிச்சா என் வாழ்க்கையில்தான் விளையாடுவியா? இவங்க இங்க அட்மிட் ஆகி இருந்தால் அவன் கண்டிப்பா வருவானே?” என்று அவள் பதற மறுபக்கமோ, “அவன் வருவானா?”என்ற ஏக்கமும் எழாமல் இல்லை.
“ச்ச.. மானம் கெட்ட மனசுக்கு மறந்தே தொலைக்க தெரியாதா? அவனால் காயப்பட்டும் அவனை எதிர்ப்பார்க்குதே.. ச்ச ச்ச.. இங்க நிக்கிறதே பெரிய பாவம்.. அவனும் சரி, இதோ இங்க படுத்திருக்கும் அவனோட அம்மாவும் சரி, ரெண்டு பேரையும் கண்டுக்காமல் போகுறது தான் நல்லது” என்று தனக்குள் சொன்னவள், இரண்டடி தான் எடுத்து வைத்தாள்.
“நர்ஸ்..தண்ணி..தண்ணி கிடைக்குமா?” தழுதழுத்து ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.
“முதல்ல நான் ஒரு நர்ஸ்.. அதுக்கு அப்பறம் தான் மத்த எல்லாமே..”என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், அவரிடம் தன் வதனத்தை காட்டினாள். எந்தவொரு உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை அவள். ஆச்சர்யமுமில்லை, பரிட்சயமுமில்லை!
“ஹும்கும்.. என்னை ஞாபகமில்லைபோல..எப்படி இருக்கும்? அவங்க விமர்சித்த பலபெண்களில் நானும் ஒருத்தியாக தானே இருந்தேன்.. அவங்க கவனத்தை ஈர்க்கனும்னா நான் உலக அழகியாக அல்லவா இருந்திருக்கனும்?” நக்கலுடன் பேசிக்கொண்டது அவளின் உள்மனம்.
“எனக்கு என்னம்மா ஆச்சு?”கனிவே உருவாய் எதிரொலித்தது அவரது குரல். அவளே ஒரு நொடி இளகித்தான் போனாள். ஆனால் அவர் செய்ததை மறக்க முடியுமா என்ன?
“சின்ன ஆக்சிடன்ட்..கைல அடி பட்டுருக்கு..பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. ரிசப்ஷன்ல உள்ளவங்க உங்க வீட்டு ஆளுங்ககிட்ட சொல்லி இருப்பாங்க.. உங்க மகனும் மருமகளும் சீக்கிரம் வந்திடுவாங்க..” என்றாள் அவள். என்னை எதுவும் கேட்டு பேச்சை வளர்க்காதே என்று சொல்லாமல் சொல்லியது அவளது முகபாவம். ஆனால் பாவம் அது அந்த பெண்மணிக்கு புரிந்தால் தானே?
“மகனும்ன் மருமகளுமா? என் பையனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலம்மா..”
“ஓ…” . அந்த ஒற்றை வார்த்தையில் அவள் எதை பிரதிபலித்தாள்? அசுவாரஸ்யமா? ஏக்கமா? சந்தோஷமா? வலியா? கோபமா? நிம்மதியா? அவளே அறிந்திருக்கவில்லை. அவர் இன்னும் தன் முகத்தையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து பதில் பேசினாள்.
“சாரி.. பொதுவாக பேஷண்ட்ஸ்கிட்ட சொல்லுற விதத்தில் சொல்லிட்டேன்..நான் வேணும்னா யாருக்கிட்ட சொன்னாங்க, அவங்க எப்போ வருவாங்கனு கேட்டு சொல்லுறேனே!”என்று அவள் நகர முயல அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார் அவர்.
“அதான் சொல்லி இருப்பாங்கனு சொல்லுறியே.. என் பையன் தான் வருவான். அவன் வர வரைக்கும் கொஞ்சம் கூடவே இரும்மா.. நான் ஹாஸ்பிட்டலுக்கு அடிக்கடி போகுற ஆளே இல்லை.. இதெல்லாம் கொஞ்சம் பயம் எனக்கு..”. லேசாய் புன்முறுவல் பூத்தவளைப் பார்த்து,
“நீ ரொம்ப அழகா இருக்க!” என்றார் அவர்.
“சொன்னது நீ தானா?சொல் சொல் சொல்..”என்று விழிகளாலேயெ வயலின் வாசித்தாள் அவள். “இதென்னடா இந்தம்மா இப்படி பல்ட்டி அடிக்கிறாங்க? ஹா ஹா காலம் கற்பித்த பாடமோ என்னவோ! மாறியது இவர் மட்டும்தானா? அல்லது இவரின் பையனுமா?” என்று மீண்டும் அவளின் உள்மனம் தன் வேலையை தொடர,
“அவன் மாறினாலும் மாறனாலும் அதபத்தி நீ கவலைபட வேண்டியதில்லை. உன் வேலையை மட்டும் பாரு”என்று அதை அடக்கினாள் அவள்.
“உன்னை தொந்தரவு பண்ணுறேனா? என் பையன் வந்ததும் நீ போகலாம்மா.. முடியும்தானே?” என்றார் அந்த பெண்மணி.
“அட தர்மராஜா! இப்போ அந்த வரலாற்றுமிக்க சம்பவம் வேற நடக்கனுமா? அவனை பார்க்கவே கூடாதுனு நான் கட்டிவெச்ச வைராக்கியம் என்ன ஆகுறது?”என்று யோசித்தவள், தானே அதற்கான பதிலையும் உருவாக்கினாள்.
“நானா அவனை தேடி போயி, வா வா அன்பே நு பாடினேன்.. நான் நர்ஸாக என் கடமையைத்தான் செய்யுறேன். அவனை நேரில் பாக்கனும். நான் எவ்வளவு திடமானவள்னு எனக்கே தெரியனும்!” என்று சொல்லிக் கொண்டாள். அவள் சொல்லி முடித்த மறுநொடி அவ்வறைக்குள் அழுத்தமான காலடிகளுடன் வந்தான் அவன்.
ஜீவனில்லாத விழிகள் கொண்டிருப்பினும் கம்பீரம் குறையாத தோற்றம்!