கவிதை சிறுகதை - ஆனந்த அதிர்ச்சி - நர்மதா சுப்ரமணியம்
உறங்கும் விழிகளால்
ஆர்வமாய் கவனித்திருந்தாள்
பேராசிரியரின் உறையை
அவளின் கல்லூரி வகுப்பறையில்....
திடுமென இருவர்
வகுப்பிற்குள் நுழைந்து
விளித்தனர் அவளின் பெயரை...
யாரோ எவரோ
ஏது செய்தியென
குழம்பினாள் கன்னிகையும்..
அழகிய பூங்கொத்தும்
இனிப்பான மிட்டாயும்
குளுமையான பனிக்கூழும்
சுவையான அப்பமுமென
விரைவு அஞ்சலாய் வந்த
காதலர் தினப் பரிசை
வழங்கினர் அவளிடத்தில்...
ஒருபுறம் பேராசிரியர் முறைக்க
மறுபுறம் அஞ்சலவர்கள்
கையில் பரிசினை ஏந்தி நிற்க
அஞ்சலில் காதலை
தூதாய் அனுப்புவித்த
அஞ்சான் எவனோவென
சிந்திந்து தன் சிந்தையை
சீண்டிக்கொண்டிருந்தால்
காரிகையும்...
கௌதம புத்திரனோ
காக்கிச்சட்டை மச்சானோ
அத்தை மகனான அத்தானோ
அம்மாவின் தம்பியான
இளைய மாமனோவென
மூளை அக்கேள்விக்கு
பதிலுரைக்க...
அப்படியேதும் உறவினர்
உன் சொந்தத்திலேயே
இல்லை மகளே என
மனசாட்சி ஓர் மார்க்கமாய்
அவளின் மூளையை சாடியது....
நிமிடத்தில் மூளைக்கும்
மனசாட்சிக்குமிடையே நடந்த
வாக்குவாத தருணத்தில்
அதிரடியாய் வகுப்பிற்குள்
நுழைந்தனர் மூவர்...
விழி விரிய திகைத்து
நின்றாள் பெண்ணவள்
அம்மூவரை கண்டு....
உற்சாகமாய் கூவினர் மூவரும்
" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி".....
முகத்தில் புன்னகை கூத்தாட
ஈ யென அனைத்து
பற்களும் பளிச்சிட
கன்னங்கள் கூச்சத்திலும்
வெட்கத்திலும் சிவக்க
ஏற்றுக்கொண்டாள்
பிறந்தநாள் பரிசை....
கண்டுக்கொண்டாள் பெண்ணவள்
தனக்கு இரண்டு நாளில்
வரப்போகும் பிறந்தநாளுக்காய்
தன் உற்றத் தோழிகள் செய்த
குறும்பு(Prank) இதுவென்று.....
{kunena_discuss:785}