சிறுகதை - ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு? - ரவை
திருமணமாகி, முதல்முறையாக, மணமகன் தங்கள் வீட்டுக்குள் மணமகளின் கரம் பிடித்து உள்ளே நுழைவதை பார்த்து, மணமகளின் பெற்றோர், ஆனந்தத்தில் கண் கலங்கினர்.
இதற்குத்தானே, அவர்கள் இத்தனை நாளாய், காத்திருந்தார்கள்! இந்த நாள் வருவதற்கு எத்தனை சோதனைகளை கடந்திருக்கிறார்கள்!
எத்தனை இரவுகள் தூக்கத்தை தொலைத்துவிட்டு புரண்டு புரண்டு படுத்து எழுந்திருக்கிறார்கள்!
" வாங்க, வாங்க, மாப்பிள்ளை!"
" அப்ப நான் வரவேண்டாமா?" என்று தாங்கள் பெற்ற மகளே வினா தொடுப்பாளென எதிர்பார்க்காத பெற்றோர், அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள், மணமகனே நிலைமையை சமாளித்தார்.
" லீலா! இது உன் வீடு! இந்த வீட்டுக்குள் முதல் முறையாக நுழைபவன் நான்! அதனால், சம்பிரதாயமாக, என்னை 'வாங்க'ன்னு வரவேற்கிறார்கள்........."
" ஆமாம் லீலா! மாப்பிள்ளை கரெக்டா சொல்றாரு! ரெண்டு பேரும் வாங்க உள்ளே!"
மணமகனின் கைகளை உதறிவிட்டு, லீலா, வேகமாக பெற்றோரை புறங்கையால் தள்ளிவிட்டு, உள்ளே சென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்!
அடுத்த வினாடி, லீலாவின் பெற்றோர்,மணமகனின் காலில் விழுந்து கண்ணீர் விட்டனர்.
மணமகன் இருவரையும் மிக்க பாசத்தோடு எழுப்பி அரவணைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமரவைத்தான்.
லீலாவின் பெற்றோர் மறுபடியும் மணமகனின் காலில் விழுந்து அழுதனர்.
" மாப்ளே! எங்க மகள் வாழ்க்கையிலே ஒரு நல்லது நடக்கணும்னு, பாசத்திலே உங்களுக்கு துரோகம் பண்ணிட்டோம். இந்த மாதிரி ஒரு சைக்கோவோட உங்களை சேர்த்து வைத்து, உங்க கழுத்திலே ஒரு பாறாங்கல்லை கட்டி கிணற்றிலேயும் போட்டுட்டோம். எங்களை அந்தக் கடவுள்கூட மன்னிக்கமாட்டார்.........."
" அப்பா! அம்மா! ரெண்டுபேரும் முதல்லே எழுந்திருங்க! கண்ணைத் துடைங்க! உம்!"
இருவரும் மெதுவாக எழுந்து மணமகனின் எதிரில் கைகூப்பி நின்றனர்.
" முதல்லே கைகளை கீழே போடுங்க! நான் உங்க மகன் மாதிரி! நீங்க எனக்கு, என்னைப் பெற்றெடுத்த அப்பா, அம்மாவுக்கு நிகரானவங்க!"
" மாப்ளே! எப்ப நீங்க எங்களை அப்பா, அம்மான்னு அழைச்சீங்களோ, அப்பவே எங்களுக்கு இந்தப் பிறவியின் முழுப் பயனும் கிடைச்சுடுத்து! எங்களுக்கு லீலா ஒருத்திதான் வாரிசே! ஆண் குழந்தையே பிறக்கலே, அது ஒரு குறையாகவே இருந்தது, இப்ப அந்தக் குறையை நீங்க இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்ச முதல்நாளே தீர்த்துவைச்சிட்டீங்க! மாப்ளே! இத்தனை உசத்தியான அற்புதமான மனசுள்ள உங்களுக்குப் போய் துரோகம் செய்துட்டோமேங்கிறதை நினைக்க நினைக்க நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு!"
" அப்பா! திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்க! அம்மா! நீங்களும் கேளுங்க! அடுத்த நிமிஷம் என்ன நடக்கப்போறதுன்னு யாருக்கும் தெரியாது, அதுபோல ஒரு நிகழ்ச்சி ஏன் அந்தவிதமா நடக்குதுன்னும் நமக்குத் தெரியாது, அவ்வளவு ஏன், எது நல்லது, எது கெட்டதுன்னு கூட நமக்குத் தெரியாதுன்னு நான் சொல்லலே, மகாகவி பாரதியார் சொல்றாரு," நல்லது தீயது நாமறியோம், அன்னை நல்லதை நாட்டுக, தீயதை ஓட்டுக" அதனாலே அப்பா! அம்மா! எனக்கும் லீலாவுக்கும் கல்யாணம் நடக்கணும்னு நீங்களோ நானோ தீர்மானிக்கலே, கடவுள் தீர்மானிச்சிட்டாரு! அதேமாதிரி, நீங்க எனக்கு கெடுதல்னு புலம்பறீங்களே, அது நல்லதா, கெட்டதான்னு நமக்கு தெரியாது, மேலே இருக்கானே ஒருத்தன், அவனுக்குத்தான் தெரியும்! அதனாலே, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாம, இயற்கையா இருங்க! என்னை நீங்க, 'தாமு'ன்னு பெயர் சொல்லியே கூப்பிடலாம், உங்க மகள் லீலா அப்படித்தான் என்னை கூப்பிடப்போறா, எனக்குத் தெரியும், இந்தக் காலத்து பெண்கள் எல்லாருமே கணவனை பெயர் சொல்லி கூப்பிடுவதைத்தான் விரும்பறாங்க! உங்க மகளே என்னை பெயர் சொல்லி கூப்பிடறபோது, நீங்க பெரியவங்க கூப்பிடக்கூடாதா?"
மறுபடியும் லீலாவின் பெற்றோர் எழுந்து நின்று உயரே பார்த்து கரங்கூப்பி, " ஈசுவரா! ஒரு சைக்கோவை மகளா கொடுத்திட்டியேன்னு உன்னை நாங்க திட்டாத நாளில்லே, ஆனா நீயோ அதற்கு ஈடுகட்டறாமாதிரி, அற்புதமான, தங்கமான, அறிவுக் களஞ்சியமா, ஒரு மாப்பிள்ளையை கொடுத்துட்டே, உன் கருணையே கருணை!" என்று கதறினர்.
" அப்பா! உரக்கப் பேசாதீங்க! சத்தம் கேட்டு, லீலா கதவை திறந்து வந்து நிக்கப்போறா!"
தாமு சொல்லிமுடிக்கவும், லீலாவின் அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்கவும் சரியாயிருந்தது.
" மாப்ளே! உங்ககிட்ட லீலாவைப் பற்றி சில தகவல்கள் சொல்லணும், பிறகு ரகசியமா சொல்றேன்." என்று ரகசியமாக சொல்லி முடிக்கும்போது, லீலா பிரசன்னமானாள்!
" தாமு! உனக்கு உங்க வீட்டிலே நிறைய வேலை இருக்குமே, நைட் ஃபங்ஷன் இருக்குல்லே, நீ போய் ரிலாக்ஸ் பண்ணிக்கோ!"
" அதுக்குத்தானே ரெண்டு பேருமே இங்க வந்திருக்கோம், உங்க அப்பா, அம்மாவை வேணுன்னா கேள்!"
" ஆமாம், லீலா! மாப்பிள்ளைக்கு நம்ம வீட்டைச் சுற்றி காட்டு!.........."