(Reading time: 17 - 34 minutes)

 ஒரு மாதம் முன்பே, விவரமாக எழுதி அதை எனக்கு அனுப்புவதிலும் உறுதியாயிருந்தவள், ஏன் கடித்த்தை எனக்கு அனுப்பவில்லை? என் கையில் அது அப்போதே கிடைத்திருந்தால், நான் வேறு முடிவு எடுத்திருப்பேனோ!

 எனக்கும் லீலாவுக்கும் நீ போட்ட இணைப்பு முடிச்சை சாதாரண மனிதன் என்னால் எப்படி மாற்றமுடியும்?

 சரி, இப்போது நான் இந்தக்கடித்த்தை என்ன செய்வது? லீலாவிடம் கொடுத்து அவள் விளக்கத்தை கேட்பதா?

 அல்லது, அவளே சொல்லட்டும் என்று காத்திருப்பதா?

 லீலா சைக்கோ பிரச்னையிலிருந்து வெளிவந்துவிட்டாள், என்கிற சந்தோஷமான செய்தியை லீலாவின் பெற்றோரிடம் தெரிவிக்கலாமா?

 'உனக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டால், லீலாவின் கடிதம் பற்றி தெரிவிக்கவேண்டியிருக்குமே, அதற்கு சரியான நேரம் வந்துவிட்டதா?

 என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தபோது, கதவருகே நடமாடும் சத்தம் கேட்கவே, அவசரமாக, புகைப்படத்தையும் கடித்த்தையும் சுருட்டி பேண்ட் பேக்கட்டில் திணித்துக்கொள்வதற்கும், கதவைத் திறந்துகொண்டு லீலா நுழைவதற்கும் சரியாயிருந்தது!

 "ஹை தாமு! இங்கே என்ன பண்றே? நல்லா தூங்கினியா? நீ ஒரு தூங்குமூஞ்சி! காலையிலேதான் என் கழுத்திலே தாலி கட்டியிருக்கே, என்னோட பேசணும், பழகணும்னு தோணலையா? உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? சுத்த வேஸ்ட்!"

 தாமு சிரித்துக்கொண்டான். லீலா இன்னமும் சைக்கோ வேஷம் போடுகிறாள், தனக்கு உண்மை தெரிந்துவிட்டது, தெரியாமல்! போகட்டும்! வேடிக்கை பார்ப்போம்!

 " டேய், புது மாப்ளே! கல்யாணமாகி ரெண்டு மணி நேரம்கூட ஆகலே, அதற்குள்ளே, மாமியார் வீட்ல சுகமா தூக்கமா? நான் என்ன சொன்னேன், உங்க வீட்டுக்குப் போய் ரிலாக்ஸ் பண்ணிக்கோ, ராத்திரி ஃபங்ஷன் இருக்குன்னு, அதை காதிலே வாங்கிக்காம இங்கேயே ஏன் ஆட்டம் போடறே?"

 " லீலா! உன்னைப்போல, ஒரு மனசாட்சியுள்ள உத்தம மான பெண்ணை உலகத்திலே எந்த மூலையிலே தேடினாலும் கிடைக்காது, உன்னை மனைவியா அடைய நான் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறேன். வசந்தகாலம்தான், இனிமே நமக்கு!"

 வேண்டுமென்றே, 'வசந்த' என்பதை அழுத்தி சொன்னான். எதிர்பார்த்தது போலவே, லீலாவின் முகத்தில் ஒரு கணம் இருள் படர்ந்தது!

உடனே சமாளித்துக் கொண்டு பேசினாள்.

 " தாமு! நமக்குள்ள என்ன அருமையான ஜோடிப் பொருத்தம் பார்! நானோ ஒரு சைக்கோ, நீயோ ஒரு முட்டாள்! கடவுள் பொருத்தம் பார்த்துத்தான் சேர்த்து வைத்திருக்கிறான்..........."

 " தானே தன்னை 'சைக்கோ'ன்னு சொல்லிக்கிற சைக்கோவை இப்பத்தான் முதன்முதலா பார்க்கிறேன். லீலா! இந்த முட்டாளுக்கு சைக்கோவை ரொம்ப பிடிச்சுப்போச்சு! உனக்கு கல்யாணப் பரிசா ஒரு வசந்த மாளிகை கட்டித் தரப்போறேன்.........."

 லீலா இதைக் கேட்டதும், யோசிக்கத் துவங்கினாள். இவன் அடிக்கடி ஏன் 'வசந்த' என்ற சொல்லை பயன்படுத்துகிறான்? ஒருவேளை இவனுக்கு என் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்குமோ?

 " லீலா! வசந்த மாளிகைக்கு கற்பனைத் தேர் ஏறி போயிட்டியா? பேச்சையே காணோம்!"

 " தாமு! நான் இங்கே வந்த காரியத்தை மறந்துவிட்டு உன்னோட அரட்டை அடிக்கிறேன், கொஞ்சம் வெளியிலே இரு! நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வரேன்..........."

 லீலாவின் திட்டம், அவன் நகர்ந்ததும், தான் ஒரு மாதம் முன்பு தாமுவுக்கு எழுதிய கடிதமும் வசந்தின் புகைப்படமும் வைத்த இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே!

 தாமுவுக்கும் அதை ஊகிக்க முடிந்தது. எல்லாம் நன்மைக்கே! என்று அறையிலிருந்து வெளிவந்தான்.

 " மாப்ளே! இங்க வாங்க!" என்று அவனை லீலாவின் தந்தை கையைப் பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 " மாப்ளே! லீலா உங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி, வெளியிலே விரட்டிட்டாளா? இப்படித்தான், மாப்ளே! ஏடாகூடமா ஏதாவது செய்யறா! தான் செய்யறது தப்புன்னு அவளுக்கு தெரியவேயில்லை! அவ சார்பிலே, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இங்கேயே இருங்க! குடிக்க, காபி கொண்டுவரேன்!"

 அவர் நகர்ந்ததும், தாமு சிரித்துக்கொண்டான். பாவம்! மகள் செய்த தவறு, அவள் பெற்றோரை கூனிக்குறுகி வாழவைத்துவிட்ட அவலத்தை கண்கூடாகப் பார்க்கும்போது, இந்த நாளில் ஒரு குழந்தையை, அதிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது, எவ்வளவு பெரிய போராட்டம் என்று நினைத்து, தாமு வருந்தினான்.

 மின்னல்போல் அறைக்குள் நுழைந்து, கதவை தாழிட்டுவிட்டு, லீலா தாமுவின் கைகளை பிடித்துக்கொண்டு, கண்களில் நீர் மல்க, பேசினாள்.

 " தாமு! எனக்கு தெரிந்துவிட்டது, அந்த கடிதமும் புகைப்படமும் உன்னிடம் இருப்பது! சத்தியமாகச் சொல்கிறேன், இந்தக் கடித்த்தை போன மாதமே உனக்கு அனுப்பி, உனக்கும் எனக்கும் நடக்கவிருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தி, உன்னை காப்பாற்றத்தான் நினைத்தேன். இந்தமாதிரி நான் ஏதாவது செய்துவிடுவேனோ என எச்சரிக்கையாக, என்னை வீட்டுக்குள்ளேயே என் பெற்றோர், நேற்று வரை பூட்டிவைத்து விட்டனர். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.