“என்னங்க…முழிக்கறீங்க.சாப்பிடுங்க.”
“எனக்கா..கேசரியா?..என்ன விஜயா ஆச்சு”
“இன்னைக்கு மட்டும் கொஞ்சம் தான் பரவாயில்லை சாப்பிடுங்க…உங்களுக்கு தான் ரொம்ப பிடிக்குமேன்னு செஞ்சேன்…கை குடுங்க…பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
என் தொண்டை அடைத்தது.கேசரி கிடைத்தற்கா இல்லை அவள் வாழ்த்தேக்கா தெரியவில்லை.கண்கள் பனிக்க கேசரியை சுவைத்தேன்.
“எப்படி இருக்குன்னு சொல்லேங்களேன்”
எனக்கு ஓ வென று அழவேண்டுமாய் இருந்தது.
“விஜயா..எனக்கு என்ன சொல்ல தெரியலை.டாக்டர் எனக்கு ஏதாவதுசொல்லிட்டாரா…எதுவானாலும் சொல்லு மா”
“ச்சீ இதென்ன பேச்சு நல்ல நாளும் அதுவுமா.எப்படி இருக்குன்னு சொல்ல வேண்டாம் போங்க ஹாலுக்கு”
சந்தோஷமும் குழப்பமும் கலந்து என்னை ஆட்டிவித்தது.சரியாக நான் ஹாலில் அமரவும் சிவராமனும் அவர் மனைவி புஷ்பாவும் நுழைந்தார்கள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவன்”
“நன்றிங்க”
என்னை பார்த்து அவருக்கு என்ன புரிந்ததோ
“வாங்க இப்படி ஒரு வாக் போயிட்டு வரலாம்”
எனக்கும் அது தேவைப்பட்டது.இப்போது சில நாட்களாக சிவராமன் உடனான நட்பு நெருக்கமாக இருந்தது.இருவரும் மரத்தடியில் அமர்ந்தோம்.
“சொல்லுங்க என்ன ப்ரச்சனை”
“ப்ரச்சனை எல்லாம் இல்லங்க”
“உங்க முகத்துல ஏதோ குழப்பம் தெரியுதே…கம் ஆன் ராகவன்…சொல்லிகிட்டா பாரம் குறைய போகுது”
பெருமூச்சுடன் எங்கு துவங்க என தெரியாமல் ஆரம்பித்தேன்.
“இந்த மாதிரி பிறந்தநாள் எப்போதோ அனுபவித்தது.இன்னைக்கு இது சந்தோஷமா இருக்கு ஆனாலும் குழப்பம்.இத்தனை நாள் அவ பேச்சு எல்லாம் வேற விதமா இருந்தது.எப்படி சொல்றது தெரியலை சார்”
அவர் சிரித்துக்கொண்டார்.”இதையே தான் அவங்களும் நினைப்பாங்க இல்லைங்கலா?”