சிறுகதை - அதனாலென்ன?? - ரவை
" அதனால் என்ன?"
அந்த வீடு, சுற்றம், உற்றார் மத்தியில் மனதில் புகுந்துகொண்டு பித்துப் பிடிக்கவைக்கும் கேள்வி!
கேள்வியை தொடுத்தது, வேறு யாராவது இருந்தாலும் அத்தனை அதிர்ச்சி இருந்திருக்காது!
கேட்டவள், நேரடியாகப் பாதிக்கப்படுகிற கன்னிப்பெண்!
பாதிப்பு என்ன, இன்று வந்து நாளை போக கூடியதா? நிரந்தரமாக, வாழ்வு முழுவதும் பாதிக்கக்கூடியது! மாற்றே இல்லாத ஒன்று!
அதை எப்படி அவளால் இவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடிகிறது? மனதார ஏற்றுக்கொள்ள முடிந்தது?
அவளுக்கும் அவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து பத்து நாட்கள்தான் ஆகின்றன.
இருவரையும் அந்த நிகழ்ச்சியில் இணைந்து பார்த்தபோது, எத்தனை பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தனர். யார் கண் பட்டதோ!
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது, விபத்தாம்!உயிர் பிழைத்ததே அதிசயமாம்! தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்றே என அவன் பெற்றோரும் உற்றாரும் தங்களை சமாதானப் படுத்திக் கொண்டார்களாம்!
அதெல்லாம் சரி, பிள்ளையைப் பெற்றவர்கள் மனநிலை அப்படி இருப்பது இயற்கைதான்!
ஆனால், திருமணம் ஆவதற்கு முன்பே, மணமகன் வலதுகாலை முற்றிலும் இழந்து, ஒற்றைக் காலில் உதவிக் கோலோடுதான் நடக்க முடியும் என்று தெரிந்தபிறகும், எப்படி அவனை மணக்க ஒரு பெண் சம்மதிப்பாள்?
அவளைப் பெற்றவர்களும் சுற்றமும்நட்புமே ஏற்கமுடியாதபோது, எப்படி அவளை கட்டாயப்படுத்த முடியும் என்று நினைத்து, அவளிடம் செய்தியை தெரிவித்தபோது, அவள் அதற்கு அளித்த பதில்தான், கேள்வியாக வெளிவந்தது!
" ஏன்டீ, உனக்கு கிறுக்கு பிடிச்சிடுத்தா?"
" நான் நல்ல அறிவுடன்தான் நன்கு யோசித்துத்தான் கேட்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பொருள் உண்டு.
எப்படி நீங்கள், இந்த பிரச்னையை, எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனபிறகு நடந்திருந்தால் அணுகுவீர்களோ, அப்படித்தான் நிச்சயதார்த்தம் முடிந்தபிறகும் அணுகவேண்டும். அப்படியில்லையெனில், நிச்சயதார்த்தம் என்கிற நிகழ்ச்சி ஒரு நாடகமாகிவிடும்......."
" நல்லாயிருக்குடீ நீ பேசறது? யோசித்துப் பார், பெற்றவர்களின் நிலையை!