கல்யாண மண்டபத்துக்கு இரண்டு நாட்கள் வாடகையாக ரூபாய் ஐந்து லட்சமும், இரண்டு நாட்களும் கலந்துகொள்கிற ஆயிரம் பேருக்கு உணவு, சிற்றுண்டி செலவுக்கு ரூபாய் பதிமூன்று லட்சமும், வீடியோ செலவுக்கு இரண்டு லட்சமும் உறவினர்களுக்கு துணிமணி வழங்க மூன்று லட்சமும் ஊரைக்கூட்டி செய்கிற திருமணத்தில், மணமகன் ஒற்றைக்காலுடன், நாங்கள் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த மகளின் பக்கத்தில் மணமேடையிலே நிற்பதை எங்களால் பார்க்கமுடியுமா? எங்களை விடு, வந்திருக்கிற விருந்தாளிகள் எங்கள் முகத்தில் காறி உமிழமாட்டார்களா?"
" நீங்கள் நினைப்பதுபோல்தான், இன்றைய சமுதாய மக்கள் நினைக்கிறார்கள் என்பது உண்மை! ஆனால், அது சரியான பார்வைதானா என யோசியுங்கள்!
ஒரு வாதமாகச் சொல்கிறேன், இப்போது மணமகனுக்கு ஏற்பட்டுள்ள உடற்குறை, உங்கள் மகளுக்கு, ஏற்பட்டிருந்தால், நீங்கள் இப்போது நினைக்கிறபடி மணமகன் வீட்டார் நினைத்தால், உங்கள் மனம் அதை ஏற்குமா?
'நிச்சயமானபிறகு எப்படி திருமணத்தை கைவிடமுடியுமா?' என அவர்கள்மீது பாயமாட்டீர்களா?"
அவளை மேற்கொண்டு பேசவிடாமலே அவள் தந்தை குறுக்கிட்டார்.
" உன் நியாயத்தை வழங்குவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா? என யோசித்துப் பார்! பத்து நாட்களாகியும் இதுவரையில் அவர்கள் நமக்கு விபத்து நடந்ததையோ, மணமகன் ஒரு கால் இழந்துவிட்டதையோ தெரிவித்தார்களா? நாணயம், தர்மம், மதிப்பவர்கள், அப்படி இருப்பார்களா? அவர்கள் மதிக்காத, நினைத்துப் பார்க்காத நியாயத்தையும் தர்மத்தையும் நாம் எதற்காக மதிக்கவேண்டும்?........."
" அவர்கள் செய்கிற பிழையை நாமும் செய்தால் பிறகு அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காதே! அவர்கள் எப்படி இருந்தாலும், நாம் நாமாகவே இருப்போம்!"
" இப்படியொரு அற்புதமான குணக்குன்றை நாங்கள் இழக்கவேண்டி யிருக்கிறது என நினைக்கும்போது, இதயமே வெடித்து சுக்கு நூறாகிறது! ஆனால், நமக்கு மீறிய சக்தி அந்த விதி விளையாடிவிட்டது......."
" வாங்க, வாங்க சம்பந்தி!"
" நீங்கள் அப்படி எங்களை அழைக்கிற தகுதியை, விதி எங்களிடமிருந்து பறித்துவிட்டது! இதை தெரிவிக்கத்தான் வந்திருக்கிறோம்......."
" அதெல்லாம் சரி, இதை தெரிவிக்க ஏன் பத்து நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்?"