" இதப் பாருங்க! இனி நான்தான் உங்கள் வலது கால்! என் இடதுபுறம் நிற்கிற நீங்கள்தான் என் இருதயம், இதயம் எல்லாமே! இதில் எந்த மாற்றமும் இல்லை!"
மணமகனும் அவன் பெற்றோரும் மணப்பெண் கூறியதைக் கேட்டதும், கண்ணீரைப் பெருக்கினர். பெண்ணின் பெற்றோரும்தான்!
" இதப் பாருங்க! இது கண்ணீர் விடுகிற நேரமல்ல; சந்தோஷப்படவேண்டிய நேரம்! தம்பதிகளாக எங்களை முதல்முறையாகப் பார்க்கிறீர்கள், கைதட்டி மகிழ்வில் நீந்துங்கள், உம்....."
அவளே மெதுவாக, மணமகனை, சோபாவில் அமர்த்தினாள்.
" குடிக்க, காபி கொண்டு வருகிறேன், கொஞ்சம் பொறுங்கள்!" என உள்ளே போக எத்தனித்தவளை மணமகன் தடுத்து நிறுத்தினான்.
" இங்கு வருவதற்குமுன் எங்கள் முடிவில் இருந்த தீவிரத்தைவிட, இப்போது இன்னும் அதிகமாக இரட்டிப்பு தீவிரத்துடன் சொல்கிறோம், 'இந்த திருமணம் நடக்காது, நடக்கக்கூடாது, நீ எங்கேயோ உயரத்தில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவள்! உனக்கு கணவனாக இருக்க எனக்கு தகுதி கிடையாது, என்னை மன்னித்துவிடு! உன் தியாகத்துக்கு எங்கள் தலைவணக்கம்! எங்கள் இதயத்தில் இனி எந்நாளும் நீ தெய்வமாகவே கொண்டாடப்படுவாய்! நீ செய்கிற தியாகத்துக்கு நான் தகுதியானவனல்ல.....!"
" தியாகமா! என்ன பேத்தல்! கடைந்தெடுத்த சுயநலம்!........"
" அப்படியெல்லாம் சொல்லி உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே!"
" சரி, விளக்கிச் சொல்கிறேன்! இதுவரையிலும் நீங்களும் என் பெற்றோரும் ஒருதலைப்பட்சமாகவே யோசிக்கிறீர்கள். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்! இந்த திருமணம் நின்றுபோனால், இந்த சமுதாயம் என்னைப் பற்றி என்ன பேசும் என யோசித்துப் பாருங்கள்! அதை உங்களால் மறுக்க முடியுமானால், இந்த திருமணத்தை நிறுத்துங்கள்!
மூட நம்பிக்கையில் ஊறிப்போன உளுத்த சமூகம் கொஞ்சங்கூட நா கூசாமல், 'இந்தப் பெண் ஒரு துக்கிரி! இவளை மணந்துகொள்ள சம்மதித்து நிச்சயதார்த்தம் நடந்தவுடனேயே, அந்த நல்ல பையன் விபத்தில் சிக்கி உயிரையே இழக்கவிருந்தான், இவளுக்கு என் மகனை கணவனாக்க சம்மதித்தால், நாங்கள் எங்கள் மகனை பறிகொடுக்க வேண்டியதுதான். வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!' என ஓடி ஒளிந்து கொள்வார்களா, இல்லையா? உங்களால் இதை மறுக்க முடியுமா? அப்படியானால், இந்த திருமணத்தை நிறுத்தினால் நான் என்றுமே கன்னி கழியாமல், திருமணமாகாதவளாகவே மொட்டை மரமாக