சிறுகதை - ஏணி, தோணி, ஆசிரியர் - ரவை
" ஏங்க! முப்பது வருஷமா, ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராகவே இருக்கீங்களே, வெட்கமாயில்லே? எனக்கு இருக்கே!"
" சுசீலா! நீ கேட்டதை ரெண்டா பிரிப்போம், ஒண்ணு, உனக்கு வெட்கமாயிருக்கிறது, ரெண்டாவது, எனக்கு ஏன் வெட்கமாக இல்லை? சரியா?"
" நான் ஒண்ணும் உங்க ஒண்ணாங் கிளாஸ் மாணவன் இல்லே, மேலே சொல்லுங்க!"
" சுசீலா! உனக்கு, வெட்கமாக இருப்பது, நான் வாத்தியாராக இருப்பதா, வாத்தியாராகவே முப்பது வருஷமா இருப்பதா, ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராக இருப்பதா, அல்லது ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராகவே முப்பது வருஷமாக இருப்பதா? இவைகளிலே எது உனக்கு வெட்கமாயிருக்கு? அதைச் சொன்னால், நான் பதில் சொல்றேன்......."
" ஐயா, சாமி! ஆளை விடுங்க! உங்ககூட பேசறதே வேஸ்ட்! சாதாரணமாக எல்லாரும் பேசறாப்பல பேசாம, குதர்க்கமாகவே பேசறீங்களே, ஏன்? உங்களை திருத்தவே முடியாது, என் டயத்தை நான் ஏன் வேஸ்ட் பண்ணணும்? சமையல் வேலையை கவனிக்கிறேன், ஆளை விடுங்க!"
" சுசீலா! பொதுவாகவே, நாம எல்லோருமே, நம் பேச்சை, செயலை, அபிப்பிராயங்களை, நாமே சரியாக புரிஞ்சிக்காமலே, வெளியிடுகிறோம், ஏன் தெரியுமா? சரியா சிந்திக்காமலே பேசறோம், செய்கிறோம், அபிப்பிராயம் சொல்கிறோம், இதை சரிசெய்து கொண்டால், பதிலும் தெளிவாக கிடைக்கும்! ........."
சுசீலா சமையலறையில் இருந்தாள். கணவன் சொன்னது காதில் விழுவதை தடுக்க முடியவில்லை, அதை யோசித்துக்கொண்டே, சமையலை செய்தாள்.
சிறிது நேரத்தில், கணவன் பேசியதிலே இருந்த உண்மை, நியாயம், நன்றாகப் புரிந்தது! தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
கணவனின் அறிவுக் கூர்மையை எண்ணி பெருமைப்பட்டாள், ஆனால் தன்னை சுற்றியுள்ள சமூகம் அதை எங்கே கவனிக்கிறது? பதவி, பணம், புகழ், செல்வாக்கு இவைகளை வைத்துத்தானே ஒருவரை எடை போடுகிறது!
அப்படி பார்க்கும்போது, அவளை மற்ற பெண்கள் ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும், நெஞ்சில் சுருக்கென தைத்தது!
"சுசீலா! உன் புருஷன் எனக்கும் ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாரா இருந்தாரு, இப்ப என் பிள்ளைக்கும் அவர்தான் ஒண்ணாங் கிளாஸ் வாத்தியார்! என் பேரனுக்கும்.........?"
கூடியிருந்த அனைவரும் பரிகாசமாக சிரித்தபோது, சுசீலாவுக்கு தன் கணவனை நினைத்து உடம்பே எரிந்தது!