எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், பக்கத்து வீட்டு பரிமளத்துக்கும், எதிர்வீட்டு இளவரசிக்கும் தரப்படுகிற கௌரவம், மரியாதை, தனக்கு தரப்படுவதில்லை என எண்ணி வருந்தினாள். ஏனெனில், அவர்களின் கணவன்கள் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்!
இந்த இழிநிலை தன் மகனுக்கும் மகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற வெறியுடன்தான் அவர்களை ஊக்குவித்து, மகனை வக்கீலாகவும், மகளை டாக்டராகவும் ஆக்கினாள்.
கணவன் என்னதான் விளக்கம் தந்தாலும், மகனுக்கும் மகளுக்கும் சமூகத்தில் கிடைக்கிற அந்தஸ்தை தன் கணவனுக்கு இந்த சமூகம் தருவதில்லையே என்று வெட்கப்பட்டாள், வேதனையுற்றாள்.
அதே நேரத்தில், இந்த நிலைமையை திருத்த, காலம் தவறிவிட்டது என்பதை நினைத்துப் பார்த்து, பெருமூச்சு விட்டாள். இந்தப் பிறவியில், தனக்கு கிடைத்தது இவ்வளவுதானா என வெதும்பினாள்.
சுசீலாவின் மனதில் ஆழமாக ஏற்பட்டுள்ள இந்த காயம், அவள் கணவன் அறிந்ததுதான்.
அவள் அப்படி வருந்துவது பேதைமை என அவளுக்குப் புரியவைக்க அவனுக்கும் ஆசைதான்! ஆனால், அவன் விளக்கம் தர முயற்சிக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவள் பொறுமை இழந்து நகர்ந்துவிடுகிறாளே, ஆற அமர்ந்து, சொல்வதை கேட்டால்தானே, விளங்கும்!
அதற்கொரு தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்!
மனைவியின் பிறந்தநாளையொட்டி, அவளுக்கு புடவை வாங்கித்தர, அவளுடன் துணிக்கடைக்கு சென்றான்.
இருவரும் கடைக்குள் நுழையும்போது, கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், இருவரும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
திடீரென, கடை சிப்பந்திகள் ஓடிவந்து, நுழைவாயிலில் இருந்த கூட்டத்தை சீர்படுத்தினர்.
கைகட்டி வாய் பொத்தி பவ்யமாக நின்றனர், கடை முதலாளி உட்பட!
வாசலில் ஒரு கார் வந்து நின்றது. முதலாளி ஓடிப்போய் காரின் கதவை திறந்துவிட்டார்.
அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கினார், மனைவியுடன்!
கடை முதலாளி கரங்கூப்பி, அவரை வரவேற்றார். சுற்றுமுற்றும் பார்த்த பெரிய மனிதரின் பார்வையில், 'ஒண்ணாங் கிளாஸ் வாத்தியார்' பட்டதும், அவர் முதலாளியை தள்ளிவிட்டு, பாய்ந்துவந்து வாத்தியாரின் காலைத் தொட்டு கும்பிட்டு, கைகட்டி நின்று, "நல்லாயிருக்கீங்களா ஐயா? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு பெரியவங்க