" ஓகோ! ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ், உன் புருஷன் காலில் விழுந்தால்தான், அவனுக்கு மரியாதை இருக்குன்னு நினைக்கிறியா? தப்பும்மா! இதே ஜட்ஜ் நாளைக்கு வேறொரு இடத்திலே என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போனார்னா, எனக்கு மரியாதை கிடையாதுன்னு நினைச்சா, அதனுடைய விளைவு என்ன தெரியுமோ?
பிறர் கொடுத்தால்தான் நமக்கு மரியாதை, பிறர் மறுநாளே கொடுத்ததை பிடுங்கிக்கொண்டு போய்விடலாம்னா, என் நிரந்தரமான மதிப்பு என் படிப்பிலேயும், குணத்திலேயும், பணத்திலேயும் இல்லை, பிறர் மனநிலையை பொறுத்து அது ஒருநாள் இருக்கும், மறுநாள் போய்விடுமா? அந்தமாதிரி காற்றிலே பறக்கிற மரியாதைக்காகவா உயிரை விடறே? சுசீலா! பிறர் கொடுத்துப் பெறுவதில்லை, மதிப்பும் மரியாதையும்! நாம் வாழும் முறையில் சம்பாதிப்பது, நீ பெருமையுடன் நம்புவது, அதை பிறர் பறிக்கவே முடியாது! சரியா?"
சுசீலா கணவனின் சொற்களில் பரவிக்கிடக்கும் சத்தியம் நன்கு புரிந்ததோடு, மனதுக்கு இதமாகவும் இருந்தது.
" பேசுங்க! நீங்க பேசிக்கொண்டே இருங்க! எத்தனை நேரமானாலும், நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்........"
இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென, கணவனும் மகிழ்வுடன் மனைவியின் கைகளை தன் கைகளில் சேர்த்துக் கொண்டு, பேசினான்.
" ஒண்ணும் பெரிய விஷயமல்ல; நீயே கொஞ்சம் சிந்தித்தால் புரிவதுதான்!
உனது தீவிரமான உழைப்பினாலேயும், தொடர்ந்து நீ தந்த உற்சாகத்தினாலேயும், நம் மகன் வக்கீலாயிட்டான், கறுப்பு கோட்டு போட்டுண்டு ஜம்முனு கோர்ட்டுக்குப் போய், நீதிபதிக்கு முன்னே நின்று மணிக்கணக்கிலே வாதிடறான், அதேபோல உன் மகள் டாக்டராகி, வெள்ளை கோட் போட்டுண்டு ஆஸ்பத்திரியிலே தினமும் பல நோயாளிகளின் வலியை, வேதனையை, போக்கறா! நோயாளிங்க, அவளை கையெடுத்து கும்பிட்டு 'நீங்க தெய்வம்மா! எங்க நோயை குணப்படுத்திட்டீங்க!'ன்னு கண்ணீருடன் புகழறாங்க!
இதையெல்லாம் நினைத்து உன் மனம் சந்தோஷப்படாமல், நான் முப்பது வருஷமா ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராகவே இருப்பதை நினைச்சு வெட்கப்படுதுன்னா, அது உன் மனசு செய்கிற விஷமத்தனம்தானே!"
" நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, எனக்கு என் மகன், மகள் மூலமாக கிடைக்கிற பெருமையைவிட, என் கணவன் மூலம் கிடைக்கிற மதிப்புதாங்க பெருமையாக இருக்கு........"
" சுசீலா! மறுபடியும் தவறு செய்கிறே! உன் பெருமையும் மகிழ்ச்சியும் பிறரை சார்ந்து