கோளாறினால், மனக்கசப்பை தந்தையின்மீது கொட்டியிருப்போமே, நல்ல வேளை, தன் அத்தை தன்னை பல ஆண்டுகளுக்குப்பின் யதேச்சையாக சந்தித்து, தன் தந்தையின் மீது இன்னமும் தொடர்ந்து காட்டிவருகிற வெறுப்பை கொட்டித் தீர்க்கும்போது, கிடைத்த செய்திகள் அல்லவா, இன்று தன்னை மறுபிறவி எடுக்கச் செய்திருக்கிறது என எண்ணி, அத்தைக்கும் அவளை தன்னிடம் அனுப்பிய இறைவனுக்கும் நன்றி செலுத்தினாள், நிர்மலா!
அத்தையிடமிருந்து அறிந்தது, ஒரு பகுதி! மறு பகுதியை, தந்தையின் நெருங்கிய நண்பர், மேகநாதனிடமிருந்து அறிந்துகொண்டாள்.
முழுமையாக விவரங்கள் அறிந்தபின்தான், தந்தையின் உருவம், நிர்மலாவின் இதயத்தில் விசுவரூபம் எடுத்தது!
எத்தனை நல்லவர்! எத்தனை இளகிய மனது! இவரை கைவிட, தாய்க்கு எப்படி மனம் வந்தது? அவள் ஒரு பணப்பேய்! கூத்தாடி! நிழல் உலகை நிஜ உலகென நம்பிச் சென்றவள்! பாசத்தைவிட, பணமே பெரிதென ஏற்றுக்கொண்டு எளியவனை, ஏணியில் ஏற்றிவிட்டவனை, எட்டி உதைத்துவிட்டு முன்னேறியவள்!
ஏற்றிவிட்டவன், இடுப்பில் குழந்தையுடன் தரையில் நின்று ஏணியை ஆடாமல், அசையாமல் காத்துக்கொண்டிருந்தவனைதிரும்பி பார்க்காமலேயே, உச்சத்தை தொட்டு பின் ஏணியை உதைத்து தள்ளியவள்!
அவளை ஒருநாள்கூட இதுவரை தந்தை வெறுத்துப் பேசியதையோ, நன்றி மறந்தவள் என வசை பாடியோ, நிர்மலா கேட்டதே இல்லை!
" அங்கிள்! எப்படி அப்பாவினால் இத்தனை பொறுமையுடன் எல்லா இன்னல்களையும், ஏமாற்றங்களையும் தாங்கிக்கொள்ள முடிந்தது?"
" நிர்மலா! உன் தந்தையின் நெடுநாளைய நெருங்கிய நண்பன் நான் என்பது உனக்குத் தெரியும்! அந்த உரிமையுடன் உன்னிடம் சில கோரிக்கைகள் வைக்கிறேன்......."
" சொல்லுங்க, அங்கிள்! உங்களை நான் என் சித்தப்பாவாகவே மதிக்கிறேன்! எனக்கு புத்திமதி சொல்ல உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு......."
" தேங்க்ஸ், நிர்மலா! சில நேரங்களில் நீ, உன் தந்தையிடம் சில விஷயங்களில் பிடிவாதம் செய்கிறபோது, கடுமையான சொற்களை பயன்படுத்துகிறபோது, என் இதயத்தில் வலிக்கிறது.
உன்னைச் சொல்லி குற்றமில்லை, உனக்கு முக்கியமான சில உண்மைகள் தெரியாது, உனக்கு தெரியக்கூடாதென உன் அப்பா நினைக்கிறான். அதன் விளைவுகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்கிறான், பாவம்!
நிர்மலா! இந்த உலகில் அவனிடம் அன்பை, நேசத்தை, பாசத்தைக் காட்ட, அவன் உறவினர்