இருவரும் மும்முரமாக தேடி, சலித்துப் பார்த்து, ஒருத்தியை தேர்ந்தெடுத்தனர்.
அவள் ஒரு பள்ளி ஆசிரியை! அவளுக்கு இதுவரையில் திருமணமாகாமல் தள்ளிப் போவதற்கு காரணம், குடும்பத்தின் ஏழ்மை மட்டுமல்ல, அவள் உடல் ஊனமும்கூட!
ஆம், அவள் வலதுகால் முழங்காலுக்கு கீழே முடம்! ஊன்றுகோல் இன்றி நடக்கமுடியாது!
அவளிடம் பேசி, அவள் குடும்பத்தாரின் அனுமதியும் பெற்று, மேகநாதனின் உற்சாகமான ஆதரவுடன், நிர்மலா தன் தந்தையை அணுகினாள்.
அவள் தந்தை, மகளின் உற்சாகமான யோசனையை மகிழ்வுடன் கேட்டபிறகு, பேசினார்.
" நிர்மலா! கால் நூற்றாண்டு தன்னந்தனியாக உன்னை பல இன்னல்களுக்கு இடையே வளர்த்து ஆளாக்கியதன் பலனை இன்று இந்த உலகமே அறியட்டும்! தந்தையின் திருமணத்தை நடத்தியபிறகே, தனக்கு திருமணம் என்று உறுதியாக நிற்கும் ஒரு கன்னிப் பெண்ணை, இந்த உலகமே பார்த்து வியக்கட்டும், என்னைப் பார்த்து பொறாமைப்படும்! ஒவ்வொரு தந்தையும் தனக்கு இப்படி ஒரு மகள் வேண்டுமென இறைவனிடம் கெஞ்சுவான்!
அத்தனை பெருமைக்கும் நான் தொடர்ந்து தகுதியானவனாக இருக்கவேண்டுமானால், நான் இப்போதுள்ளபடியே உன் தந்தையாக மட்டுமே வாழவேண்டும்! இந்த, எவருக்கும் கிடைக்காத பெருமையை, கிடைக்கமுடியாத பெருமையை, நான் பெறுவதற்கு காரணமாயிருந்த என் தனி நபர் வாழ்க்கைக்கு பங்கம், முறிவு, விரிசல், ஏற்படவே கூடாது.
நிர்மலா! ஒன்றை இழந்துதான், இன்னொன்றை பெறுவதென்பது உலக நியதி!
நான் எந்தக்காரணத்துக்காகவும் நான் போராடிப் பெற்ற தகுதியை, பெருமையை, இழக்கத் தயாராக இல்லை! அவசியமும் இல்லை!
பிரதீபனுக்கு சம்மதம் என்றால், உங்கள் இருவரின் திருமணத்துக்குப் பின்னும், நான் உங்களுடனேயே சேர்ந்து வாழ்கிறேன். அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்? என்னை கட்டாயப்படுத்தாதே, நிர்மலா!"