மிரட்டினார்கள், உன் தாயும் பாட்டியும்!"
நிர்மலாவுக்கு இத்தனை செய்திகளுக்கு இடையே ஒரு நிம்மதி, தான் ஒரு திருமணமான தம்பதியருக்கு முறையாகப் பிறந்தவள் என்பதே!
அந்த நிம்மதியும், அத்தையினால், பறிபோயிற்று!
" உங்கப்பன், அவள் மிரட்டலுக்குப் பயந்து, எங்களிடம் ஓடிவந்தான். நாங்கள் விசாரித்ததில் தெரிந்தது, அந்த வீட்டின் சொந்தக்காரனின் கள்ளக்காதலிக்குப் பிறந்த பெண், நீ! வேறுவழியின்றி, கோபத்தில், உன் அப்பனுக்கு குடும்பத்தில் சேரவேண்டிய பங்கை பிரித்துக் கொடுத்து, எங்களுக்கும் அவனுக்கும் இருந்த பந்தத்தை அறுத்துக்கொண்டு விரட்டிவிட்டோம்......."
மேகநாதன் அத்தைக்கு தெரியாத விவரங்களை தெரிவித்து பூர்த்தி செய்தார்.
" சொத்துக்களுடன் வந்தவனை, உன் தாயும் பாட்டியும், 'நீ திருமணமானபிறகு, எங்களை அடித்துவிரட்டிவிட்டால், எங்கள் கதி? அதனால், உன் சொத்துக்களை எங்கள் பெயரில் எழுதிவை!'ன்னு மிரட்டி வாங்கிக்கொண்டபின், திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார்கள். ஏன் என்பது பிறகுதான் தெரிந்தது!
நீ பிறந்ததும், உன் தந்தையின் மடியில் உன்னைப் போட்டுவிட்டு, உன் தாயும் பாட்டியும் பிரிந்துபோய் விட்டார்கள். உன் தாய் சினிமா துறையில் அன்று ஒரு துணைநடிகையாக இருந்தவள் இன்று முன்னணி நடிகையாகிவிட்டாள்!
உன் தந்தைதான் உன்னை முழுக்க முழுக்க வளர்த்தது! ஒரு ஆண், குழந்தையை வளர்க்க எத்தனை பாடுபட்டிருக்கவேண்டும், நினைத்துப் பார்! ஆனால், உன்னை காப்பகத்தில் சேர்க்க மனமின்றி தானே வளர்த்தான். இந்த விஷயங்கள் உனக்கு தெரியக்கூடாதென, என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டான்......."
அப்போதுதான் நிர்மலாவுக்குத் தெரிந்தது, தான் முறை தவறி பிறந்தவள், என்பது!
நிர்மலா தன் காதலன் பிரதீபனிடம் கலந்து பேசினாள்.
" நிர்மலா! உன் அப்பாவுக்கு வயது எத்தனை?"
"ஐம்பதுக்குள்தான் இருக்கும்......."
" ஓ.கே. அப்படியானால், சுமார் நாற்பத்தைந்து வயதானவளாகவும், கல்யாணமாகாதவளாகவோ, விதவையானவளாகவோ தேடலாம்.......குழந்தைகள் இல்லாத விதவையா?"
" ஆமாம், குழந்தைகள் உள்ளவளாக இருந்தால், அந்த விதவைக்கு என் தந்தையின்மீது இருக்கவேண்டிய பாசத்தை பங்கு போட்டுவிடுவாள்......"