சிறுகதை - பிள்ளை வருகிறான்! - ரவை
அம்மாவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது! காலையிலிருந்து சாப்பிடாத பசியோடு, தாங்கமுடியாத சோகத்துடன் சுருண்டு கிடந்தாள். பெற்ற பிள்ளைகள் இரண்டும் எத்தனையோ ஆறுதல் கூறியும், பயனில்லை!
"பிள்ளை வரப்போறான், என் பிள்ளை வரப்போறா"ன்னு மூத்த மகன் சீனுவிடமிருந்து தகவல் வந்ததிலிருந்து, ஒரு வாரமாக மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் பதினெட்டு வயது பெண்ணைப்போல, ஆடறதும் குதிக்கிறதும் சிரிக்கிறதும் யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் முதல் விஷயமாக ' பிள்ளை வரப்போறான், என் பிள்ளை வரப்போறான்'னு பெருமைப்பட்டுக் கொள்வதும் கண் பட்டுவிட்டதோ?
வெளிநாட்டுக்கு படிக்கப் போயிருக்கிற பிள்ளை படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும், வீடு திரும்பி வரமாட்டானா, இதிலென்ன அதிசயமிருக்கு? ஏதோ குழந்தையாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்துபோய், முப்பது வருஷம் கழித்து வீடு வந்து சேருவதுமாதிரி, இவள் ஏன் இப்படி தவிக்கிறாள்?
காலையில் ஆவின் பால் பாக்கெட் போடுபவனிடம் தன் மகன் வரப்போவதை தெரிவிப்பது அவசியமா? நீங்களே கேளுங்கள், அந்தக் கூத்தை:
" இந்தாப்பா ராமு! கவனமா கேட்டுக்க! என் பிள்ளை அமெரிக்காவிலிருந்து வரப்போறான் ஒரு வாரத்திலே.........."
" யாரு நம்ம சீனுங்களா?"
" என்ன அப்படி சாதாரணமா சொல்லிட்டே? இப்ப அவன் வெறும் சீனு இல்லே, டாக்டர் சீனு!"
" ஓ! வைத்தியம் பார்க்கிற படிப்பு முடிச்சிட்டாரா?"
" பைத்தியம்! இது அந்த டாக்டர் இல்லே, பொறியியல் படிப்பிலே இனிமேல் படிக்க எதுவுமே இல்லைங்கற அளவுக்கு படிச்சி முடிச்சி, மேதாவியா வரான், சரி சரி, கவனமா கேட்டுக்க! காலையிலே, இருட்டோட பால் பாக்கட் போட்டுடு, லேட் பண்ணாதே, அவன் தினமும் விடியலின்போதே எழுந்துடுவான், அவனுக்கு உடனே காபி தந்தாகணும், அவன் வாக்கிங் கிளம்பறதுக்கு முன்னே! புரிஞ்சுதா? சரி, நீ கிளம்பு! எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு, என் பிள்ளை வரதுனாலே........"
சிரித்துக்கொண்டே ராமு நகர்ந்ததும், வீட்டுக்குள் வேலை செய்ய நுழைகிற வேலைக்காரியிடம் இதே பாட்டு!
" வள்ளி! இந்த மாசத்திலிருந்து உனக்கு இரட்டிப்பு சம்பளம்! ஏன்னா, என் பிள்ளை வரப்போறான், அவனுக்கு வீடு, பாத்திரம், துணிமணி எல்லாமே எப்பவுமே சுத்தமா இருக்கணும், அதனாலே நீ இனிமே இரண்டு வேளையும் வேலைக்கு வந்திடு! .....ம்! முக்கியமா