" மூணாவது உறுதிமொழியை நடத்த, நானும் உனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து வைச்சிருக்கேன், நீ வந்து அவளை பார்த்து ஓ.கே. சொன்னால் போதும்......."
" என் ஓ.கே.யை விட, என் செல்லத் தங்கை மேரியின் ஓ.கே. முக்கியம். இல்லையா, மேரி?"
" ஆமாம்மா! என் ஸ்வீட் பிரதருக்கு பொருத்தமான பெண்ணாயிருக்கணும்மா!"
" அம்மா! நாலரை மணி வரையிலும், இடிந்துபோய் சோகமா சுருண்டு படுத்திருந்தியே, எப்படிம்மா திடீர்னு மனசு மாறினே?"
லோகுவின் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்ட அம்மா சிரித்துக்கொண்டே, சொன்னாள்.
" லோகு! பாபு! எனக்கு தாங்கமுடியாத சோகம் வரபோதெல்லாம், உங்கப்பா என் மனசிலே திடீர்னு தோன்றி, எனக்கு புத்திமதி தருவார்........"
" இன்னிக்கு என்ன புத்திமதி சொல்லி, உன் சோகத்தைப் போக்கினார்?"
" இன்னிக்கி அவர் சொன்ன முக்கியமான விஷயம், 'பெத்த பிள்ளைங்களை அவங்க சிறு குழந்தைகளாக இருக்கிறபோது, அவங்களை நீ உன் இடுப்பிலே தூக்கி வைத்துக்கொள்வது, சரி, பொருத்தம், அழகு! ஆனால், அவங்க வயசுக்கு வந்தபிறகு, அவங்களை உன் இடுப்பைவிட்டு இறக்கினால்தான், அவங்க நடக்கிற அழகைப் பார்த்து ரசிக்கமுடியும். பேசறதைக் கேட்டு சந்தோஷப்பட முடியும்.' அடுத்து, உங்கப்பா சொன்னது, ' நீ எப்படி உன் வாழ்க்கையை நீ விரும்புகிறபடி அமைச்சிக்கிறியோ, உனக்கு அந்த சுதந்திரத்தை நீயே கொடுத்துக்கிறியோ, அந்த சுதந்திரத்தை உன் பிள்ளைகளுக்கும் கொடு! அவங்க கரெக்டாகத்தான் தங்கள் வாழ்வை அமைச்சுப்பாங்க! அவங்களை நம்பு, தைரியமா!'ன்னு சொன்னார்"
அம்மாவின் முகத்தில் சுடர்விட்ட புதிய ஒளிகண்டு அவள் பெத்த பிள்ளைகளும், பெறாத மகளும் பூரித்துப் போயினர்.