காத்திருந்தனர்.
காலம் தன் கடமையை சரிவர செய்தது! மணி நான்கு!
இருவரும் எழுந்து, வாசலுக்கே வந்து காத்திருந்தனர்!
சிறிதுநேரம் கழித்து, தங்கள்மீது ஏதோ நிழல் விழுந்ததும், திரும்பி பார்த்தனர்.
அம்மா!
" வாம்மா! மணி நாலாகிவிட்டது, எந்த நேரமும் அண்ணன் வந்துடுவான்..........."
அவள் பதில் பேசவில்லை. முகத்தில் சோகம் கப்பியிருந்தது. அதைவிட, ஏமாற்றம் கண்களில் கொப்பளித்தது!
டிக்....டிக்....டிக்
பத்து நிமிஷம்......இருபது நிமிஷம்......தம்பிகள் இருவரும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தனர்.
அம்மா அங்கே இல்லை!
வீட்டுக்குள் தேடினர். எங்கும் காணோம்!
இறுதியாக டாய்லெட் கதவை தட்டி 'அம்மா!' என குரல் கொடுத்தனர்.
'ம்' என முனகல் சத்தம் வந்தது! அப்பாடா! அம்மா இருக்கிறாள், சில நொடிகளில் அவளைப் பார்ப்போம் என பெருமூச்சு விட்டனர்.
மணி நாலரை! இன்னமும் சீனுவைக் காணோம்!
தம்பிகளுக்கே எரிச்சலாயிருந்தது! பாவம், அம்மா! சமையலறையில் துவண்டு படுத்திருப்பாள் என நினைத்து, எட்டிப் பார்த்தபோது, அவள் அங்கே டைனிங் டேபிளில், மூன்று பேருக்கு பிளேட் எடுத்து வைத்து, சாப்பிட தயாராகிக் கொண்டிருந்தாள்.
ஆச்சரியத்தில், தம்பிகள் இருவரும் ஓடிவந்து 'அம்மா'ன்னு குரல் கொடுத்தவாறே, அவளருகே வந்தனர்.
" மணி ஆயிடுத்து! எனக்கு பசிக்கிறது! உங்களுக்கும்தான்! நாம் சாப்பிடுவோம்........"
" சரிம்மா! அண்ணன் வர நேரமாயிடுத்து, வந்துவிடுவான்......."
" வரட்டுமே! அவன்தான் நம்மை சாப்பிடச் சொல்லிவிட்டானே! நமக்கும்தான் வயிறு இருக்கு, ருசி தெரியுது, விருந்து சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவோம், வாங்க!"
பாபு, லோகுவைப் பார்த்து சிரித்தான்.
" அம்மா! என்ன, நீயே 'வெட்டு வெட்டலாம்'னு சொல்றே?"
" என்னை நானே மாற்றிக்க முடிவு எடுத்துட்டேன். வாழ்க்கையிலே மாறாத ஒரு விஷயம், மாற்றம்னு எல்லோரும் சொல்றாங்களே!"