வாயடைத்துப்போய், தம்பிகள் தூணாய் நிற்க, அம்மாவோ ரொம்ப சகஜமாக மேரியை தொட்டு எழுப்பி, அவள் கையில் சத்தியம் செய்து தந்தாள்.
" மேரி! இந்த நிமிடத்திலிருந்து நீ என் மகள்! இவர்கள் உன் உடன்பிறப்புகள்! இந்தக் குடும்பத்தில் நீயும் ஒருத்தி!"
" அம்மா! ரொம்ப பசிக்குதும்மா! சாப்பிடலாம்மா! சீனு அண்ணனுக்கும் ரொம்ப பசி! நீங்க காத்திருப்பீங்கன்னு சொன்னாரு........."
" ஆமாம்மா! நீ பெத்த பிள்ளைம்மா நான்! எனக்கு தெரியாதா உன் மனசு? ராத்திரி எட்டு மணி ஆனாலும், நீ எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பேன்னு......."
கண்கள் குளமாக, அம்மா சீனுவுக்கும் மேரிக்கும் முத்தம் கொடுத்துவிட்டு, டைனிங் டேபிளில், மேலும் இரண்டு பிளேட் வைத்து, ஞாபகமாக, மேரிக்கு சாப்பிட ஸ்பூனும் வைத்தாள்.
" அம்மா! சீனு அண்ணன் என்னை ஏற்கெனவே தமிழ்ப் பெண்ணாக்கிட்டாரு, நான் ஒரு வருஷமா சைவ உணவுதான்! எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு! அதுபோல, இப்பல்லாம், ஸ்பூன் உபயோகிக்கிறதே இல்லே, சீனு அண்ணனைப் பார்த்து நானும் கையை உபயோகித்துத்தான் சாப்பிடுகிறேன். பழகிட்டதனாலே, என்னவோ இப்படி சாப்பிடறதிலே, தனி ருசியிருப்பதுபோல ஃபீல்பண்றேன்!"
பேசிக்கொண்டே, சேமியா பாயசத்தை விரலால் தொட்டு நாக்கில் தடவிக்கொண்டாள், மேரி!
அடுத்த நொடியே, துள்ளி எழுந்தாள்.
" ரொம்ப நல்லாயிருக்கு! சூபர்!"
சீனு, தானே சமையலறையிலிருந்து தயாரித்திருந்த அத்தனை உணவுப் பொருட்களையும் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, " அம்மா! நீயும் உட்கார்! எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்." என்றதும் அம்மாவும் அமர்ந்தாள்.
" அம்மா! மேரியும் என்னைப் போல, டாக்டரேட் முடிச்சுட்டா! நாங்க ரெண்டு பேரும், இந்தியாவிலேயே, இல்லை, இல்லை, சென்னையிலேயே உன்னுடன் சேர்ந்து இருந்துகொண்டு, புதிய கம்பெனி ஆரம்பித்து நடத்தப் போறோம். இதுவரையிலே இந்தியாவிலே எவரும் செய்யாத புதிய தொழில்! அதற்கு தேவையான மூலதனம், மேரி தன் கோடிக்கணக்கான சொத்திலிருந்து எடுத்து போடப்போறா! எதுக்கு சொல்றேன்னா, அம்மா! உனக்கு நான் மூணு உறுதிமொழிகளிலே, இரண்டை காப்பாற்றியாச்சு,......கூடவே,உனக்கு ஒரு மகளையும் கொண்டு வந்திருக்கேன், சந்தோஷந்தானே?"