சிறுகதை - நட்பு - ரவை
அவன் புகழை இந்த நாடே பேசும்! இல்லை, கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளும் பேசும்!
அது மட்டுமா? அவனை வைத்து விளம்பரம் செய்து வியாபாரத்தில் கொழிக்காத பெரிய கம்பெனிகளே கிடையாது!
உலகப் பணக்காரன்களில் வரிசையிலே அவன் நான்காவது இடத்தில் உள்ளான்!
அவன் பிறந்த நாளன்று அவனை வாழ்த்தி பிரதம மந்திரியே செய்தி அனுப்புவார்!
அவனுக்கு குடியரசு தலைவர் பரிசு அளித்ததை படம் பிடித்து, எல்லா ஊடகங்களும் முழு பக்கம், அதிலும் முதல் பக்கத்தில் வெளியிட்டு அலங்கரித்தன!
இவைகளை ஏன் அடுக்கிக் கொண்டே போகிறேன்னு கேட்கிறீங்களா?
இவைகளை சொன்னால்தானே, நான் சொல்லப் போகிற சாதாரண நிகழ்வின் அசாதாரணம், மகிமை, விசேஷம், வித்தியாசம் உங்களுக்கு விளங்கும்!
அவன் என் வீடு தேடி வந்து, என்னை சந்தித்தான்!
இது மட்டுமா?
" டேய் பராசுரா! உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆயிடுத்துடா!" என்று சொல்லி, தோளில் கை போட்டு, கட்டியணைத்து, முத்தமிட்டான்!
என் அம்மா, அப்பாவிடம் "வணக்கம்! சௌக்கியமா? எப்படி இருக்கீங்க? அம்மா! நீங்க போடற காபியை ரசித்துக் குடித்து, எவ்வளவு வருஷம் ஆயிடுத்து?"
" அப்பா! அந்த நாளிலே, என் குடும்பம், அக்கம்பக்கம், பள்ளிக்கூட ஆசிரியர், எல்லாரும் என்னை 'உருப்படாதவன்'னு 'படிப்பிலே சூன்யம்'னு ஒதுக்கித் தள்ளினபோது, 'இவன் ஒருநாள் பெரிய கிரிக்கெட் ப்ளேயரா வரப்போறான், பாரு!'ன்னு நீங்க ஒருத்தர்தான் உற்சாகப்படுத்துனீங்க! உங்க வாக்கு பலிச்சிடுத்து!"
என் பெற்றோர் இருவரின் காலைத் தொட்டு வணங்கினான்!
என் அண்ணனுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
" அண்ணா! எப்படி இருக்கீங்க? உங்க 'கேர்ல் ஃபிரண்டு' சௌக்கியமா? அவங்களுக்கு உங்க லவ் லெடரை நான்தானே கொண்டு கொடுப்பேன்! உங்க கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மறந்துடாதீங்க!"
" ஏய் ஹீரோ! எப்படிடா இருக்கே? உன்னை தடவிக் கொடுத்து, கொஞ்சி, விளையாடி எத்தனை வருஷம் ஓடிப்போயிடுத்துடா!" என்று அவன் குரல் கொடுத்தவுடனேயே, ஹீரோ அவன்மீது தாவி, ஒட்டி, முகர்ந்து, வாலை ஆட்டி, மகிழ்ந்தது!
அவன் குரல் கேட்டதும், எங்கள் வீட்டில் பல வருஷங்களாக வீட்டுவேலை செய்யும் முனியம்மா, எட்டிப் பார்த்தாள்.