" உன் இஷ்டம்! மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் மீட்டிங் நடக்கும்......"
ஓனர் நகர்ந்ததும், மாரிசாமியின் மனைவி வள்ளி, தன் கணவனிடம் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
" ஏங்க, நிறைய குறைகள் இருக்கிறபோது, ஒண்ணுமே வேண்டாம்னு சொல்லிட்டீங்க?"
" வள்ளி! விஷயம் புரியாம பேசாதே! இப்பவே வாடகையும் மற்ற செலவுகளும், நான் வாங்கற சம்பளத்தைவிட அதிகமாயிருக்கு, ஓனர் வாடகையை ஏற்றாமல் இருக்கணுமேன்னு பயந்துகிட்டிருக்கேன்........"
வள்ளிக்கு புரிந்தது!
" ஆமாங்க! நீங்க சொல்றது, சரிதான். அதிக வாடகை தரலேன்னா, வீட்டை காலி பண்ணச் சொன்னால், நாம எங்கே போவது?"
மொட்டை மாடியில், ஓனர்கள் விவாதம் துவங்கியது.
துவக்கத்திலேயே, தலைவர் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை வரிசைப்படுத்தினார்.
" இந்த கட்டிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தபிறகு, இதுவரையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாதலால், சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பதிலிருந்து, மின்சார ஒயர்கள் புதுப்பிப்பது, தண்ணீர் குழாய் பைப்புகள் மாற்றுவது, போர்வெல்களை தூர் எடுப்பது, எதுவுமே நாம் செய்யாத காரணத்தால், இப்போது எல்லா வேலைகளும் உடனடியாக செய்யப்பட வேண்டியவைகளாக நம்மை பயமுறுத்துகின்றன....."
ஓனர் ஒருவர் தொடர்ந்தார்.