" கேள்வி உன்னைப் பற்றியதாச்சே! அம்மாவின் அண்ணா தினமும் வந்து அவளை நச்சரிக்கிறானாம், நீயோ பிடி கொடுத்து பதில் சொல்லமாட்டேங்கிறாயாம், அதனாலே இன்னிக்கி ஒரு முடிவு தெரிந்தாகணுமாம்,...."
" அதெல்லாம் சரிப்பா, நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க, அம்மா!?"
" வேறென்ன, அவ அண்ணனோட மகளை நீ கட்டிக்க சம்மதிக்கணும், எக்கச்சக்க சொத்து நமக்கு கிடைக்குமாம், உங்க மாமாவுக்கு உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கு, வாரிசு, அவரோட மகள் ஒருத்திதானாம்! பொண்ணு அழகாவும் இருக்கா, நல்லா படிச்சிருக்கா, உனக்கு அந்தப் பொண்ணு எல்லா விதங்களிலும் பொருத்தமாம்!"
" அப்பா! நீயென்ன சொல்றே?"
" கதிரவா! அம்மாவுக்கும் எனக்கும் நீ கோடீஸ்வரனாவதிலே, கொள்ளை ஆசை! மற்றவை கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் பரவாயில்லே, கதிரவா! இப்ப எனக்கும் உங்கம்மாவுக்கும் பத்து பொருத்தமும் இருந்தா, கல்யாணம் ஆச்சு?"
" ஏன், எனக்கென்ன குறைச்சல்? பிள்ளைகிட்ட ரகசியமா குறைப்படறீங்களா?"
அம்மாவின் திடீர் பிரவேசம் கதிரவன், அவன் அப்பா இருவரையுமே திடுக்கிட வைத்தது.
" மகாலட்சுமி! நீ சரியா புரிஞ்சிக்காமல் என்னை கோவிச்சிக்கிறே!
நான் சொன்னது, உன் படிப்புக்கும், அழகுக்கும், சொத்துக்கும் நான் பொருத்தமானவன் இல்லேன்னு சொன்னேன்."
" சரி, சமாளிக்காதீங்க! அதை விடுங்க! நம்ம ஒரே பிள்ளை இவன்! இவன் வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கணும்னு நாம ஆசைப்படறதிலே, என்ன தப்பு? அதை ஏன் இவன் புரிஞ்சிக்காம இருக்கான்? இன்னிக்கி ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சாகணும்."
கதிரவன் அம்மாவை அணைத்தவாறு அவளை சமாதானப் படுத்தினான்.
" அம்மா! உனக்கு என்னிடமிருந்து ஏதாவது ஒரு முடிவு தெரிஞ்சிக்கிறதிலே, ஆர்வமா? இல்லே, நான் உன் அண்ணன் மகளை கட்டிக்கணுங்கிறதிலே ஆர்வமா?"
" இதென்னடா, அசட்டுக் கேள்வி! நீ என் அண்ணன் மகளை கட்டிக்கிறதிலேதான்."
" இதுவரையிலும் நான் அந்தப் பெண்ணை கட்டிக்க மாட்டேன்னு சொன்னேனா?"
" கட்டிக்கிறேன்னும் சொல்லமாட்டேங்கிறியே...."
" உனக்கும் அப்பாவுக்கும் சந்தோஷமான பதில் தரணும்னுதான் எனக்கும் ஆசை. அப்படி சொல்வதற்குமுன், சில விஷயங்களிலேயே தெளிவு பெறவேண்டியிருக்கு, அதுக்கு கொஞ்சம் டயமாகுது......"