" கொஞ்ச நேரத்திலே, நான் செத்துப் போயிடுவேன். அப்புறம் உன்னை யார் கவனிச்சிப்பாங்க? தனியா உன்னாலே இந்த உலகத்திலே வாழமுடியாது, அதனாலே, இந்த மிச்சத்தை நீ குடி! கண்ணை மூடிண்டு குடி! பத்து எண்ணுவதற்குள், நாம ஜோடியா பல்லக்கிலே ஏறி, நேரே சுவர்க்கத்துக்கு போயிடலாம், வா!"
சம்பத்குமாருக்கு மற்ற சொற்களின் பொருள் விளங்காவிட்டாலும், 'செத்துப்போயிடலாம்' என்ற ஒரு சொல்லின் பொருள் தெரிந்தது!
ஏனெனில், முதல்நாள்தான், அவர்கள் வாழ்ந்த டபீர் குளத்தெருவில் பத்து வீடு தள்ளி, சம்பத்துடன் கூடிவிளையாடும் சிறுவனின் தாத்தாவை நாலுபேர் தூக்கிச் சென்றதைப் பார்த்த சம்பத், தன் தோழனை விசாரித்தான்.
" எங்க தாத்தா செத்துப்போயிட்டாருடா!"
" அப்படீன்னா, என்னடா?"
" கண்ணு மூடியே இருக்கும், பேசமாட்டாங்க, நடக்கமாட்டாங்க, சாப்பிடமாட்டாங்க, சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாதாம், அதோட அவங்க வீட்டிலே இருக்கக்கூடாதுன்னு, சுடுகாட்டுக்கு கொண்டுபோய், எரிச்சு சாம்பலாக்கிடுவாங்களாம்.."
இது நினைவுக்கு வந்ததால், சம்பத் பயந்துபோய், தாயின் கையிலிருந்த குவளையை வாங்கிக்கொள்ளாமல், குடிசையிலிருந்து தலை தெறிக்க, எங்கு போகிறோம் என்பதே தெரியாமல், ஓடினான், ஓடினான், ஓடிக்கொண்டேயிருந்தான்.
படிப்பில்லை, ஆதரவில்லை, மாற்றுடையில்லை, பிச்சையெடுத்து காலம் தள்ளினான்.
ஆண்டுகள் எத்தனையோ கடந்தும், அவன் மனதில் தன்னைப் பெற்றவளே, தன்னைக் கொல்ல முயற்சித்தாளே என்ற வெறுப்புணர்வு கனலாக தகித்தது.
யாரிடம் சொல்லமுடியும், இந்த ரகசியத்தை? தன்னை வளர்த்து ஆளாக்கவேண்டிய தாய் எனும் ஏணியே ஏற்றிவிடாமல், சறுக்கிவிட்டதை எண்ணி எண்ணி மாய்ந்தான்!