தெரியும், அது மறந்திருந்தாலும், அந்த மகாமகத்தின்போது ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயாம்மாவும் தோழியும் விஜயம் செய்து குளித்ததுபற்றி செய்திகள் பரவியது நினைவிருக்குமே!
அந்த இடத்துக்கு அருகே உள்ள வீதிதான் டபீர்குளத்தெரு!
இப்போது, அந்த வீதி எப்படி மாறியுள்ளதோ, அதை யாரறிவார்?
ஆனால், சம்பத்குமார் பிறந்து வளர்ந்த வீடும், இல்லை மாளிகையும், குடும்பமும் அந்தத் தெருவில்தான் இருந்தது.
சம்பத்குமாரின் தந்தை வைதீகர் என்றாலும், பரம்பரை சொத்தாக அவருக்கு இந்த மாளிகையும் நான்கு காணி நஞ்சைநிலமும் சொந்தம்!
சம்பத்குமார், பெற்றோரின் கடைசி பிள்ளை! அவர்கள் வாழ்ந்த காலத்தில், குடும்பக் கட்டுப்பாடு என்பதெல்லாம் தெரியாது; தெரிந்தாலும் அது சாஸ்திர விரோதமாக கருதப்பட்ட காலம்!
'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுந்த' பத்தினிகள் வாழ்ந்த காலமது!
வைதீகர் ஏகநாத கனபாடிகள்-காமாட்சி தம்பதிக்கு பிறந்தது, ஒரு டஜன்!
குழந்தைப் பருவத்திலேயே மூன்று பேர், கண் மூடிவிட்டதால், மற்ற ஒன்பது குழந்தைகள் வளர்ந்தனர்.
அதில் நான்குபேர் பெண்கள்!
அந்த நான்கு பெண்களுக்குப் பிறகு பிறந்த ஐவரும் ஆண்கள்!
கனபாடிகளுக்கு நான்கு சகோதரிகள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமலேயே, கனபாடிகளின் தந்தை சுவர்க்கத்துக்கு அவசரமாகப் போய்விட்டார்.
விதவை அம்மாவையும் நான்கு சகோதரிகளையும் காப்பாற்றி சகோதரிகளுக்கு திருமணம் செய்துவைத்து கரையேற்றுவதற்குள், நான்கு காணி நஞ்சை நிலம் கைமாறி விட்டது!
மிச்சமிருந்தது, அவர்கள் வாழ்ந்துவந்த மாளிகை போன்ற 'ரெண்டுகட்டு' வீடு மட்டுமே!
கனபாடிகளுக்கு வைதீகத்தில் கிடைத்த வருமானத்தில், ஒன்பது குழந்தைகளை மட்டுமின்றி, காமாட்சியின் தம்பி, தங்கைகளையும் காப்பாற்றவேண்டிய நெருக்கடியில், சேமிக்கவே இடமில்லாத நிலை மட்டுமின்றி, வருமானம் அனைத்தும் செலவழிந்து, ஆங்காங்கே கடனும் நிலுவையில் நின்றது!
'காமாட்சியம்மா சத்திரம்' என்றுதான் அவர்கள் வீட்டை ஊரார் அழைத்தனர்.
எப்போதும், கோட்டை அடுப்பு எரிந்துகொண்டே யிருக்கும். இரண்டு அனாதை விதவைகளுக்கு இரக்கப்பட்டு அவர்களிடம் சமையல் பணியை தந்திருந்தாள், காமாட்சி அம்மாள்!