சிறுகதை - வயிற்றுக்குச் சோறு - ரவை
ஊரே அடங்கிவிட்டது, ஊரடங்கு சட்டத்தினால்!
எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.
இருப்பதை உண்டு, படுக்கையில் புரண்டு, டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்து, செல்போனில் பேசி, சுடோகு போட்டு, நேரத்தை கழித்தனர்.
அவளுக்கு செல்போன் இல்லை, வீட்டில் டி.வி. இல்லை, ஏனெனில் வீடே இல்லை, புரள படுக்கையில்லை, உண்ண எதுவுமில்லை!
ஆனால், அவளுக்கும் ஊரடங்கு சட்டம் உண்டு!
" ஏம்மா! அறிவில்லே, வீட்டுக்குள்ளே இருன்னு சட்டம் போட்டா, ஊரிலே அத்தினி பேரும் வீட்டுக்குள்ளே இருக்காங்க இல்லே, நீ மட்டும் வெளியிலே நிக்கிறே.......?"
" எனக்கு அறிவிருக்கு, ஆனா வீடில்லையே!"
" என்னம்மா, சொல்றே?"
" நான் வெளியூரிலிருந்து வந்து இங்கு வேலை செய்கிற தினக்கூலி! வேலை செய்கிற இடத்திலேயே துண்ணுவோம், தூங்குவோம், குளிப்போம், திறந்தவெளி வீடய்யா எனக்கு........"
" இன்னிக்கும் அங்கேயே கிடக்கவேண்டியதுதானே?"
" இன்னிக்கி வேலை இல்லே, கூலி இல்லே, சோறு இல்லே, அதான் இப்படி தெருத்தெருவா லோலோன்னு அலையறேன்..."
" அதான், அம்மா உணவகத்திலே சும்மா சோறு போடறாங்கல்லே......"
" அதை தேடிக்கிட்டுத்தான்யா, போறேன்......"
" பாஸ் இருக்கா?"
" எனக்கேதுய்யா, பாசும் காசும்....."
" அப்ப நீ போகமுடியாது....."
" அம்மா உணவகத்தை இங்கே வரச்சொல்றியா? எனக்காகத்தானே போடறாங்க, சோறு!"
" என்னம்மா! விளையாடறியா?"
" ஏன்யா, வயிற்றுப்பசியோட வாடறேன், நான் எங்கேய்யா விளையாடறது....
எனக்காக சோறு போடறவங்க, ஒண்ணு நான் இருக்கிற இடத்துக்கு வரணும், இல்லே அது இருக்குற இடத்துக்கு என்னை அனுமதிக்கணும், இதுதானே, நியாயம்?"
" சட்டத்துக்கு எதிரா நியாயம் கேட்கிறியா? போ, ஹைகோர்ட்டுக்கு!"
" சரி, வழிவிடு, ஏதோ சொன்னியே, அங்க போறேன்......"
" பாஸ் இருக்கா?"
" நீதானேய்யா, என்னை அங்க போகச்சொன்னே...."