" இதென்னடா பேஜாரா பூடிச்சு.....சரி, என்னை மாட்டிவிட்டுறாதே! ஒளிஞ்சு மறைஞ்சு, அம்மா உணவகம் போய்ச்சேரு!"
அவள் தெருவோரமாக நடந்தாள்.
அம்மா உணவகத்தை தேடிக்கொண்டு போனாள்.
எல்லா கடைகளும் மூடியிருந்தன!
விசாரிப்பதற்கும், தெருவில், ஈ, காக்கா இல்லே!
பசி வயிற்றை பிடித்து இழுத்தது. அப்படியே வயிற்றை பிடித்துக்கொண்டு தெருவோரமாக சுருண்டு விழுந்தாள்.
கண்கள் மயக்கத்தில் செருக, அவள் கிடந்தாள், கட்டையாக!
தெருநாய் ஒன்று, அவளை முக்ர்ந்தது, சுற்றிச் சுற்றி வந்தது. குரைத்தது.
எங்கிருந்தோ, மேலும் ஓரிரண்டு நாய்களும் சேர்ந்து கொண்டன. சுற்றி வந்து குரைத்தன.
போலீஸ் ரோந்து வேன் அந்தப் பக்கமாக வந்தது. தெருநாய்கள், வேனை நோக்கி ஓடி, எதிரே மறித்து, விடாமல் குரைத்தன.
போலீஸ்காரன் கீழே இறங்கி வந்தவுடன், அவனை நாய்கள், ஓரத்தில் கிடந்த பெண்ணிடம் அழைத்துவந்தன.
பெண்ணைக் காட்டி குரைத்தன! போலீஸ்காரனுக்கு புரிந்துவிட்டது!
" இருங்கடா, அவளை தண்ணி தெளிச்சு எழுப்பறேன்....." என்று வேனிலிருந்து தண்ணி ( குடி தண்ணி தான்) பாட்டிலை எடுத்துவந்து, பெண்ணின் முகத்தில் தண்ணியை தெளித்து, எழுப்பினான்.
அந்தப் பெண் கண் திறந்தாள். வாயை திறந்து காட்டினாள். போலீஸ் தண்ணியை ஊற்றினான். அவள் குடித்துக்கொண்டே இருந்தாள். வயறு காலியாயிருந்ததே!......
பாட்டில் காலி! இன்னமும் பெண் வாயை திறந்தபடி இருந்தாள்.
" இத பாரும்மா! அவ்வளவுதான்! எழுந்திரிச்சி வூட்டுக்குப் போ! என் உசுர வாங்காதே!"
" எங்க இருக்கு, வூடு?"
" உன் வூடு எங்கேன்னு, உனக்கு தெரியாதா?"
" வூடு இருந்தால்ல தெரிய! பசி! சோறு!" கையை வாயில் வைத்து சைகையில் பசிக்கு உணவு கேட்டாள்.
" சரி, எழுந்துரு!"
அவள் முயன்றும் முடியவில்லை.