கூண்ட்ல அடைச்சிட்டாங்கல்ல, அதான்யா....
ராசா!...."
" இரு, இரு, இன்னொரு வாட்டி.....கண்ணுல்ல,......."
" ஐயைய! இதென்ன பச்சப்புள்ளப்போல, சொல்றத கேள்யா!
நமக்கெல்லாம், வயத்துக்கு சோறு கெடச்சா போதும், வேற ஒண்ணும் வேணாம், கட்டாந்தரைல படுத்து புரளுவோம், நிம்மதியா தூங்குவோம்,.....
அவுகளுக்கு, இம்மாம் ஆசை கீதுய்யா! பங்களா, காரு, பணம், பதவி, படிப்பு எத்தினி, எத்தினி,.....பாவம்! அதுனால, அவுகளுக்கு எப்பவும் மொகம் இருட்டாத்தான்யா இருக்கும்!"
" ரோசா!....."
" யோவ்! என்ன, பேரை கட் பண்ணிட்டே, பொறவு, நானும் உன் பேருல, 'ரா'வ எடுத்துருவேன், ஆமாம்! ஒளுங்கா, 'சரோசா'ன்னு கூப்டு! ஆங், சொல்லிட்டேன்! சரி, என்ன சொல்லவந்தே, சொல்லிப் போடு!"
" ரோசா! பெரிய படிப்பு படிச்சவுக பேசறாப்பல, அளகா பேசறே, நீ! ஒன்ன படிக்க வச்சிருந்தா...."
" என் ராசா! ஒனக்கு பேராசய்யா! நீ நெனக்கறாப்பல, நான் படிச்சிருந்தா, இப்ப நீ, இந்த ரோசாவ கூப்டு பேசறாப்பல, பேசமுடியுமா?
ஒனக்கு நான் வேணான்னா, சொல்லு! படிக்கிறேன்......
அத்த வுடு! ராசா! படிச்சவன்லாம், நம்மப்போல, டமாஷா பேசி சந்தோசமா இருக்கானா பாரு! அங்கே திரும்பிப் பாரு! அவுக படிச்சவுகதானே! அளுவுறாங்க, பாரு!"
" அப்ப படிப்பே வோணாமா?"
" இவுகள்ளாம் படிக்கிற படிப்பு குப்பைய்யா! எது படிப்பு தெரியுமா?
நம்ம நாட்ல, வாலாயமா, சாமியாருங்க வந்து போவாங்களே, அவங்க படிச்சதுதான்யா, படிப்பு! அவுகளுக்கு இந்த இங்கிலிபீசு தெரியுமா? ஆனா, சந்தோசமா இருக்கறது எப்படின்னு தெரியும்!
பச்சப்புள்ள, களுக்னு சிரிக்குமே பாத்துருக்கியா? அத்தப் பாத்தாலே, பசிகூட மறந்துரும்யா! நீ செத்த முன்ன சொன்னியே, நான் உன் பேரை சொன்னாலே, சில்லுனு கீதுன்னு, அது சந்தோசம்யா!
ஒலகத்த படச்ச அந்த கடவுளு, நமக்கு பசி தீர, இப்டி ஒரு வழி காட்டியத நெனச்சு பாரு, அது சந்தோசம்!
யோவ்! என்னெ பேச வுட்டுட்டு, நைஸா, என் மடில கை போடறே? பிச்சுப்புடுவேன், பிச்சு! எடுய்யா கைய!"
மடியிலிருந்து எடுத்த கைகளால், அவன், தன் இடுப்பைச் சுற்றி இறுக்கியபோது, அவள் ஏனோ கைகளை எடுக்கச் சொல்லவில்லை!
அடுத்த வேளைச் சோற்றைப்பற்றிய கவலை எங்கே காணோம்?