சிறுகதை - நிழல் அல்ல, நிஜம்! - ரவை
ரித்திகாவுக்கு இந்த அனுபவம் புதிது! காதலித்து கல்யாணம் செய்துகொண்டவனுடன், செகந்தராபாத்திலிருந்து பெங்களூர் வந்து கணவன் குமார் வேலையில் அமர்ந்து, கைநிறைய சம்பாதித்து கொண்டு வந்ததில், மகிழ்வுடன் குடும்பம் நடத்தி வந்து, அவர்களின் அன்பின் அடையாளமாக, ரித்திகாவின் வயிற்றில் கரு வளர்கிறது, ஒன்பது மாதங்களாக!
இந்த நிலையில், கொரோனா தொற்றின் விளைவாக, குமார் பணியாற்றிய தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டார்கள்.
தொழிற்சாலைக்கு வெளியே அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது!
"ஊரடங்கு சட்டப்படி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது."
மற்ற ஊழியர்களை விசாரித்ததில், ஒருவருக்கும் மேற்கொண்டு விவரம் தெரிய வில்லை!
தலையை தொங்கப் போட்டவாறு, குமார் வீட்டில் நுழைந்ததும், ரித்திகா புரிந்து கொண்டாள்.
" குமார்! உலகமே இந்த தொற்றுக்குப் பயந்து ஊரடங்கு சட்டம் அமலாக்கி உள்ளபோது, யாரையும் பழி சொல்லி பயனில்லை!
கையிலுள்ள பணத்தில் சமாளிப்போம்!"
கழுகுக்கு மூக்கில் வியர்த்ததுபோல, வீட்டுச் சொந்தக்காரன், கையிலிருந்த பணத்தையும் வாடகைக்காக பிடுங்கிச் சென்றுவிட்டான்.
கையில் காசுமில்லை! கொடுத்து உதவ, நண்பர்களும் இல்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேச வழியும் இல்லை! ஏனெனில், வீட்டைவிட்டு வெளியே போக முடியாது!
கைவசமிருந்த உணவுப் பொருட்கள் ஒரு வாரம்கூட போதுமானதாக இல்லை!
பால் வாங்கவும் காசில்லை! குடிதண்ணீரை பருகி, எத்தனை நாட்கள் காலம் தள்ளமுடியும்?
" குமார்! அரசாங்கத்திலே நம்மைப் போல உள்ளவங்களுக்கு இனாமா சோறு போடறாங்களாமே....."
" எங்கேனு தெரியலியே! இரு, வெளியே போய் விசாரித்து வருகிறேன். கதவை தாளிட்டு பத்திரமாக வீட்டுக்குள் இரு!"
குமார் வெளியே வந்து, இரு பக்கமும் பார்த்தான், தெரு வெறிச்சுக் கிடந்தது.
கொஞ்சதூரம் நடந்தான், பின்னாலிருந்து போலீஸ் வேன் ஒன்று வந்து அவனருகில் நின்றது!
அதிலிருந்து இறங்கிவந்த காவலர்,
" எங்கே போறே?" எனக் கேட்டார்.
" நானும் என் கர்ப்பிணி மனைவியும் பட்டினி கிடந்து தவிக்கிறோம். இனாமாக சோறு போடுகிற இடம் தேடிப் போகிறேன்........"
" பாஸ் இருக்கா?"